| ADDED : டிச 10, 2024 07:27 AM
பெலகாவி: பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், சபாநாயகர் அமர்வதற்காக அவரது பீடத்தில் 45 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட, புதிய நாற்காலி வைக்கப்பட்டு உள்ளது.பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் கர்நாடக அரசின் குளிர்கால கூட்ட தொடர் நேற்று துவங்கியது. சபாநாயகர் பீடத்தில், சபாநாயகர் அமரும் இருக்கை வழக்கத்தைவிட வித்தியாசமாக இருந்தது. இதனை அனைத்து உறுப்பினர்களும் கூர்ந்து பார்த்தனர். இதனை கவனித்த சபாநாயகர் காதர், 'எனது பீடத்தில் புதிய நாற்காலி நிறுவப்பட்டு உள்ளது' என்றார். ரோஸ்வுட் மரம்
நாற்காலி குறித்து மேலும் அவர் கூறியதாவது:அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபைக்கு மிக உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவியும் அரசியல் அமைப்பு பதவி தான். அந்தப் பதவி இந்த சபையை வழிநடத்தும் பொறுப்பாகும்.இங்கு முதலில் சாதாரண மரத்தால் செய்யப்பட்ட இருக்கை தான் இருந்தது. தற்போது பெங்களூரு விதான் சவுதாவில் உள்ளது போன்று இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை ரோஸ்வுட் மரத்தால் செய்யப்பட்டது. சூரியகாந்தி மலர்
பெங்களூரு விதான் சவுதா போன்று, இங்கேயும் சபாநாயகர் இருக்கை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய இருக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விதான் சவுதாவை கட்டிய கெங்கல் ஹனுமந்தய்யா, சபாநாயகர் இருக்கை பற்றி மிகச் சிறந்த கருத்தை கொண்டு இருந்தார். இதனால் இருக்கையை தனித்துவமாக அவர் திட்டமிட்டார்.பரந்த சாம்ராஜ்யத்தை கொண்டிருந்த ஹொய்சாளா மன்னர்கள் நீண்ட காலம் சிறப்பாக ஆட்சி செய்தவர்கள். அவர்கள், தங்கள் சின்னமாக சிங்கத்தை கொண்டிருந்தனர். இதனால் புதிய இருக்கையின் இருபுறமும் சிங்கம் செதுக்கப்பட்டு உள்ளது. இருக்கையின் உச்சியில் சூரியகாந்தி மலரின் படம் செதுக்கப்பட்டுள்ளது. இருக்கையின் முன்புறம் சூரியன், சந்திரன் சின்னங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. நம் நாட்டில் மாம்பழத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் மாம்பழத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த புதிய இருக்கை 45 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.