உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவை இல்லாத வழக்குகளை சி.பி.ஐ., தலையில் திணிக்காதீர்கள் சுப்ரீம் கோர்ட் அறிவுரை

தேவை இல்லாத வழக்குகளை சி.பி.ஐ., தலையில் திணிக்காதீர்கள் சுப்ரீம் கோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வழக்கமான நடைமுறையாக, சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடக் கூடாது. விதிவிலக்கான மற்றும் அத்தியாவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், சட்ட மேல்சபை ஊழியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. கடைசி முயற்சி இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி., அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: நீதிமன்றங்கள் தங்கள் உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது, கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும். சிலரால் குறை கூறப்படுவதாலோ அல்லது மாநில காவல் துறையின் மீது ஒரு தரப்பினருக்கு நம்பிக்கை இல்லையென்பதாலோ, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது. விதிவிலக்கான மற்றும் அத்தியாவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே, அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். குற்றங்கள் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்றும், நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்றும் நீதிமன்றங்கள் கருதினால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம். மேலும், வழக்குகளின் சிக்கல் தன்மை, தேசிய அளவில் அதன் தாக்கம், அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், மாநில காவல் துறையின் மீது சந்தேகம் எழும் சூழல்களில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம். கூடுதல் சுமை கட்டாயப்படுத்தும் சூழல் இல்லாத நிலையில், விசாரணையில் சி.பி.ஐ., தலையிடுவதை தவிர்த்து, நீதித் துறை கட்டுப்பாட்டை நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி சி.பி.ஐ., மீது கூடுதல் சுமையை வைக்க வேண்டாம். இந்த வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

c.mohanraj raj
அக் 18, 2025 14:11

அவர்களும் விசாரித்து கிழித்து விட்டாலும் அப்படித்தான் இருக்கும்


திகழ்ஓவியன்
அக் 18, 2025 12:25

ஆனா இது தமிழ்நாட்டிற்கு பொருந்தாது


V Venkatachalam
அக் 18, 2025 09:41

சூப்பர் கோர்ட்டின் வழி காட்டுதல் படி தான் ஹை கோர்ட் தீர்ப்பு வழங்குவது. அதன் பின்னர் சி பி ஐ விசாரணை வேணும்ன்னு கேக்குறாங்க.


shyamnats
அக் 18, 2025 08:50

பெரும்பாலான மாநில காவல் துறைகள் மீது நம்பிக்கை இழப்பதால்தானே இத்தகைய வேண்டுகோள்கள் எழுகின்றன . காவல்துறைகள் ஆளும் கட்சிகளின் கைத்தடியாக மாறுவதால் இந்த பிறச்னைகள் . தன்னிச்சையாக செயல் பட அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.


GMM
அக் 18, 2025 08:37

சட்ட மேல்சபை ஊழியர்கள் நியமன முறைகேடு பற்றி மாவட்ட அளவில் / துறை கீழ் விசாரணை போதும். ஆவணம் , விதிகள் இருக்கும். முடிவு பாரபட்சம் இருந்தால் மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். வக்கீல் பணம் பெற, வழக்கு தொடர அனுமதி கூடாது. கரூர் சம்பவம் அரசியல் புதிர். பெரிய கலவரம் இல்லை. அதிக உயிர் இழப்பு. சதி இருக்கும். தடயம் அழிக்க முடியும். சிபிஐ விசாரணை தேவைபடும்.


Kasimani Baskaran
அக் 18, 2025 05:18

எந்த வழக்கையும் விசாரித்து முடித்து தண்டனை கொடுப்பதை விட தண்டனை கொடுக்குமளவுக்கு குற்றம் இருந்தால் தண்டனையை கொடுத்து வழக்கு நடத்தலாம். இல்லை என்றால் பெரும்பாலும் குற்றவாளிகள் செத்த பின்னரும் கூட வழக்குகள் முடிவதில்லை.


Mani . V
அக் 18, 2025 03:53

ஆமா, அப்படியே அறுத்துத் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். தலையில் பாரத்தை ஏற்ற வேண்டாம். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு யூடியூப்பில் படம் பார்த்துக் கொண்டு..... சரி, வேங்கைவயல் பிரச்சினை என்னவாயிற்று?


SanthaKumar M
அக் 18, 2025 03:26

நன்றாகச் சொன்னீர்கள், ஆனால் ஏன் கடந்த வாரம் கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றினீர்கள்?


ஆரூர் ரங்
அக் 18, 2025 08:31

மாநில காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தவறு செய்தது. அந்த குற்றத்தை மாநில உயரதிகாரிகள் நியாயப்படுத்தி பேட்டி அளித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவ்வழக்கை மாநில காவல்துறையே விசாரிப்பது சரியல்ல. யாரும் தன்னைத்தானே நியாயமாக விசாரிக்க முடியாது.


Ramesh Sargam
அக் 18, 2025 01:55

உச்ச நீதிமன்ற அறிவுரை ஏற்கப்படவேண்டியது. அதே சமயம் ஒரு தாழ்ந்த விண்ணப்பம் உச்ச நீதிமன்றத்திற்கு: பல வருடங்களாக உங்களிடம் மற்றும் நாட்டின் மற்ற நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை துரிதகதியில் விசாரித்து தீர்ப்பு வழங்கவும். உங்களுக்கே தெரியும், JUSTICE DELAYED IS JUSTICE DENIED என்று. அந்த தவறை நீதிமன்றங்கள் செய்யலாமா?


SANKAR
அக் 18, 2025 00:58

thiruttu theeyamuka Stalin aatchi in Uttara pradesh ozhigs


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை