பெங்களூரு, கர்நாடகாவில், எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நடத்திய அரையாண்டு பொது தேர்வு முடிவுகளை வெளி யிட, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மாணவர்களின் கல்வி திறனை அளவிடும் வகையில், எட்டு, ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடத்த, அரசு முடிவு செய்தது. கண்டனம்
இதற்கு, தனியார் பள்ளிகளும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாநில உயர் நீதிமன்றத்தில், தனியார் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை மார்ச் 22ல் தள்ளுபடி செய்த நீதிமன்றம், பொதுத்தேர்வு நடத்த அரசுக்கு அனுமதி அளித்தது.இதையடுத்து, 24 மாவட்டங்களில் எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் இறுதியில் அரையாண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். பொதுத்தேர்வு நடத்தியது சர்ச்சைக்கு காரணமானதால், அரையாண்டு தேர்வு முடிவு வெளியிடுவதை அரசு நிறுத்தியது. மற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கு தேர்வு நடத்துவதை தள்ளி வைத்தது.இதற்கிடையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இம்மனு நீதிபதி பேலா எம்.திரிவேதி, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன், நேற்று காலை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், அரையாண்டு பொதுத்தேர்வு நடத்திய கர்நாடக அரசை வன்மையாக கண்டித்தனர். தடை
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பொதுத்தேர்வு நடத்துவதன் மூலம், மாணவர்களுக்கு ஏன் தொல்லை கொடுக்கிறீர்கள். எந்த மாநிலங்களிலும், இதுபோன்று நடந்ததில்லை. இவ்வாறு செயல்படக் கூடாது. அகங்காரத்தால் பிரச்னையை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.உங்களுக்கு, உண்மையில் மாணவர்கள் நலனில் அக்கறை இருந்தால், சிறப்பான பள்ளிகளை திறக்கலாம். மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் வேலையை செய்யாதீர்கள். கர்நாடக அரசு பின்பற்றும் கல்வி நடைமுறை போன்று, வேறு எந்த மாநிலங்களும் பின்பற்றவில்லை.அரையாண்டு பொதுத்தேர்வு நடத்தாத மாவட்டங்களில், தேர்வு நடத்த கூடாது. ஏற்கனவே தேர்வு நடந்திருந்தால், அடுத்த உத்தரவு வரும் வரை, முடிவுகளை அறிவிக்க கூடாது. நான்கு வாரங்களில் தேர்வு குறித்து விபரங்கள் அடங்கிய அபிடவிட்டை, மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.