விருப்ப தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் சிராக்: தே.ஜ., கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் இழுபறி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பீ ஹாரில், சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில், தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பஸ்வான், குறிப்பிட்ட சில தொகுதிகளை கேட்டு அடம் பிடிப்பதால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 தொகுதிகளுக்கு நவ., 6 மற்றும் 11ல், இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணி - காங்., கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சி, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் தலா 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள 43 தொகுதிகளில், சிராக் பஸ்வானுக்கு 20; ஜிதன் ராம் மஞ்சிக்கு 10; உபேந்திர குஷ்வாகாவுக்கு 6 தொகுதி கள் ஒதுக்கப்பட உள்ளதாக வும் தகவல் வெளியானது. அதிருப்தி இதனால் அதிருப்தி அடைந்த மத்திய அமைச்சர் ஜிதம் ராம் மஞ்சி, '15க்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டோம். அதே சமயம் தே.ஜ., கூட்டணியை விட்டு போக மாட்டோம்' என, சமீபத்தில் கூறினார். மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானோ, 40 தொகுதிகள் என்ற நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்தார். 2024 லோக்சபா தேர்தலில், பீஹாரில், தே.ஜ., கூட்டணியின் கீழ் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளையும் லோக் ஜனசக்தி கைப்பற்றியது. அந்த தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறாததால், சிராக் பஸ்வானின் ஆதரவு முக்கியமானதாகக் கருதப்பட்டது. இதனாலேயே அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தல் வெற்றியை கருதி, பீஹார் சட்டசபை தேர்தலில் அவர், 40 தொகுதிகளை எதிர்பார்க்கிறார். முதலில், 40 தொகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, சிராக் பஸ்வான் சற்று இறங்கி வந்துள்ளார். அதாவது, '35 தொகுதிகள் வேண்டும். அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' என, அவர் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால், தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் தே.ஜ., கூட்டணியினர் தவித்து வருகின்றனர். பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணி வசமுள்ள கோவிந்த்கஞ்ச், மதிஹானி, சிக்கந்தரா, பிராம்பூர் சட்டசபை தொகுதிகளை சிராக் பஸ்வான் கேட்பதால், இழுபறி நீடிக்கிறது. மேலும், லோக் ஜனசக்தி ஆதிக்கம் செலுத்தும் மஹ்னார், மஹுவா, மோர்வா, அலாவுலி, பாகல்பூர், சதார், பக்தியார்பூர், பதுஹா, அத்ரி, ஓப்ரா, ஷேக்புரா, அர்வால், ஜெஹனாபாத் உள்ளிட்ட தொகுதிகளையும் அவர் கேட்டு வருகிறார். பிடிவாதம் சிராக் பஸ்வான் 40 தொகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்து, 35 தொகுதிகள் போதும் என இறங்கி வந்தாலும், விருப்ப தொகுதிகளை பெறுவதில் பிடிவாதமாக இருப்பதால், தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே, தே.ஜ., கூட்டணியின் தொகுதி பங்கீடு விபரம் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.