விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல்!
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், 34 வாகனங்களில் வரும் மனித வெடிகுண்டுகள் வாயிலாக, 400 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, மும்பை நகர் முழுதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்; முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மும்பையில், பல இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அவ்வாறு வைக்கப்பட்ட சிலைகளை கடலில் கரைக்கும் அனந்த சதுர்த்தி விழா, மும்பையில் இன்று நடக்கிறது. இந்த நிகழ்வில், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் திரள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாக்., பயங்கரவாதிகள் இதையொட்டி, நகரம் முழுதும் பாதுகாப்பு பணியில், 21,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எந்த அசம்பாவிதமுமின்றி, அனந்த சதுர்த்தி விழாவை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கான, 'வாட்ஸாப்' எண்ணுக்கு மிரட்டல் குறுஞ்செய்தி நேற்று வந்தது. அதில், 'லஷ்கர் - இ - ஜிஹாதி பெயரில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அனந்த சதுர்த்தி நடைபெறும் 6ம் தேதி, மும்பையில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும். 'நகரம் முழுதும், 34 வாகனங்களில் வரும் மனித வெடிகுண்டுகள் இதை செயல்படுத்துவர். மொத்தம் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்துகள் பயன்படுத்தி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும். இந்த சம்பவத்தால், 1 கோடி மக்கள் உயிரிழப்பர். நாடு முழுதும் 14 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்' என, குறிப்பிடப்பட்டது. தீவிர சோதனை இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மும்பை முழுதும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், முக்கிய ஹோட்டல்கள், பஸ் நிலையம், விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெடிகுண்டு மிரட்டல் குறித்து ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்புக் குழுவுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. 'அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறோம். எதையும் அலட்சியப் படுத்தவில்லை. 'இந்த தருணத்தில், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். சந்தேகப்படும்படியான நடவடிக்கை குறித்து அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தாருங்கள்' என, தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக மும்பை போலீசாருக்கு, இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், அவை புரளி என தெரியவந்தது. இருப்பினும், இந்த தகவலை அலட்சியப்படுத்தாமல் மும்பை நகரம் முழுதும் போலீசார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.