உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிபுராவிலிருந்து சென்ற பஸ் மீது தாக்குதல் வங்கதேசத்தில் அதிகரிக்கும் அட்டூழியம்

திரிபுராவிலிருந்து சென்ற பஸ் மீது தாக்குதல் வங்கதேசத்தில் அதிகரிக்கும் அட்டூழியம்

அகர்தலா,: வட கிழக்கு மாநிலமான திரிபுராவிலிருந்து சென்ற பஸ் மீது, வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பயணியர் மீது குண்டுகளும் வீசப்பட்டன. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா வழியாக, வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவுக்கு பஸ் இயக்கப்படுகிறது. இந்த வழியே செல்வதால், பாதி தொலைவு குறைவு என்பதுடன், விமான கட்டணத்தை விட பஸ் கட்டணம் குறைவு. இதனால், இருநாட்டினரும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் இருந்து சென்ற பஸ் மீது வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக திரிபுரா போக்குவரத்து துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து திரிபுரா போக்குவரத்து அமைச்சர் சவுத்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: திரிபுராவில் இருந்து மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவுக்கு டாக்கா வழியாக சமீபத்தில் இயக்கப்பட்ட பஸ்சில் ஏராளமான இந்திய பயணியர் இருந்தனர். இந்த பஸ் வங்கதேசத்தின் பிரமான்பரியா மாவட்டத்தில் உள்ள பிஸ்வா ரோட்டில் சென்றபோது, திடீரென வந்த லாரி வேண்டுமென்றே நம் பஸ் மீது மோதியது. இதில் முன்னால் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து பஸ்சில் இருந்து இறங்கிய இந்திய பயணியரை உள்ளூர் நபர்கள் மிரட்டினர். மேலும் பஸ் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், இந்தியர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வங்கதேச அரசு இந்திய பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்க மறுப்பு

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஜே.என்.ராய் மருத்துவமனையில், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆனால், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது சமீபகாலமாக தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை கண்டித்து, அந்நாட்டினருக்கு கோல்கட்டா மருத்துவமனை சிகிச்சை அளிப்பதில்லை என, சமீபத்தில் அறிவித்தது. இதே காரணத்திற்காக திரிபுராவின் அகர்தலாவில் உள்ள ஐ.எல்.எஸ்., மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிப்பதில்லை என, நேற்று முடிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.எல்.எஸ்., மருத்துவமனை தலைமை செயலதிகாரி கவுதம் ஹசாரிகா கூறுகையில், ''வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து, சமீபத்தில் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கோரிக்கைக்கு முழு ஆதரவளிக்கிறோம். எனவே வங்கதேசத்தினருக்கு இனி சிகிச்சையளிக்க மாட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
டிச 23, 2024 16:18

அப்போ திரிபுரா மின்நிலையத்திலிருந்து வங்க தேசத்திற்கு கொடுக்கப்படும் மின்சாரம் உடனே நிறுத்தப்படவேண்டும். ஏற்கனவே ரூ 200 கோடி வங்கதேசம் மின்கட்டணம் கட்டவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை