UPDATED : நவ 14, 2025 12:46 PM | ADDED : நவ 14, 2025 12:14 PM
நமது சிறப்பு நிருபர்
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்று வாக்குறுதி அளித்தும் லாலுவின் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. குடும்ப அரசியல், ஊழல், காட்டாட்சியை வாக்காளர்கள் விரும்புவதில்லை என்பதை நிரூபணம் செய்யும் வகையில், பீஹார் மாநில தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு, தேஜ கூட்டணி மக்களுக்கு வழங்கிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ததை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் ஆர்ஜேடி கட்சியின் தோல்விக்கு குடும்ப அரசியலே காரணம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியபோது லாலு பிரசாத் தனது மனைவிக்கு முதல்வர் பதவியை வழங்கினார். மகளுக்கு எம்.பி., பதவி வழங்கினார். இரண்டு மகன்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கினார். அவரது உறவினர்கள் பலர், பல்வேறு பொறுப்புகளில் மாநிலத்தை சீரழித்தனர்.அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்களில் எங்கு பார்த்தாலும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆதிகம் செலுத்தினர். இதில் மக்கள் அடைந்த அதிருப்தி தான், அந்த கட்சியினரை படுதோல்வி அடையச் செய்துள்ளது. லாலு முதல்வராக இருந்தபோது நடந்த கால்நடைத்தீவன ஊழல், அரசு வேலைக்கு இடத்தை லஞ்சமாக பெற்றது போன்றவை, மாநில மக்கள் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கின்றன.இந்த ஊழல்களுக்காக, லாலுவும் அவரது குடும்பத்தினரும் இன்னும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய அரசியலால் தான் பீஹார் மக்கள் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியை புறக்கணித்து உள்ளனர். அதுமட்டுமின்றி லாலுவின் இன்னொரு மகன் தேஜ் பிரதாப் தனிக்கட்சி ஆரம்பித்து, தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை தாறுமாறாக செலவழித்து அட்டகாசம் செய்யும் அவரது செயல்பாடுகள், லாலுவின் குடும்பத்துக்கு ஏற்கனவே இருந்த மிச்சம் மீதி பெயரையும் கெடுத்து ஒழிப்பதாக உள்ளன. இது போதாது என்று அவர் குடும்ப அரசியல் பின்னணியில் முன்னணிக்கு வந்துள்ள ராகுலுடன் தேஜஸ்வி யாதவ் கைகோர்த்து இருந்தார்.இத்தகைய காரணங்களால் தான், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தும் தேர்தலில் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்றால் என்ன செலவாகும் என்று கணக்கு தெரியுமா என்று பாஜ தலைவர்கள் பிரசாரத்தில் கேள்வி எழுப்பியது, பீஹார் மக்கள் மனதில் அப்படியே பதிந்து விட்டது.இதனால், தேஜஸ்வி கூறியது பொய் வாக்குறுதி என்று வாக்காளர்கள் நம்பி விட்டனர். இதன் காரணமாகே அவரது கட்சி, போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தோல்வி முகத்தில் உள்ளன.