UPDATED : பிப் 08, 2024 06:29 PM | ADDED : பிப் 08, 2024 05:53 PM
புதுடில்லி: தேர்தலை சீர்குலைக்கும் வெளிநாட்டு அச்சுறுத்தலாக இந்தியா உள்ளதாக, கனடாவின் பாதுகாப்பு உளவு அமைப்பு கூறியதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அந்நாடு தான் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக தெரிவித்துள்ளது.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்தாண்டு குற்றஞ்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.இந்நிலையில், கனடாவின் பாதுகாப்பு உளவு சேவை பிரிவு, கடந்தாண்டு அக்டோபரில் அரசுக்கு ரகசிய ஆவணத்தை தாக்கல் செய்தது. இந்த ஆவணத்தின் ஒரு பகுதி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆவணத்தில், கனடாவில் தேர்தல் நடைமுறைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக தலையீடு செய்யும் வெளிநாட்டு அச்சுறுத்தலாக இந்தியா உள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு இந்தியா மீது வைக்கப்பட்டது. தற்போது இரு தரப்பு உறவுகள் மோசமாக உள்ள நிலையில், இந்தியா மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக நமது வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று கூறுகையில், ‛‛ கனடா தேர்தலில் இந்தியா தலையீடு என்ற தகவல்களை பார்த்தோம். இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். மற்ற நாடுகளின் ஜனநாயக நடவடிக்கைகளில் தலையிடுவது என்பது இந்தியாவின் கொள்கை கிடையாது.உண்மையில், கனடா தான் இதற்கு நேர்மாறாக நடந்து வருகிறது., இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறது. இது பற்றிய பிரச்னையை தொடர்ச்சியாக அந்நாட்டிடம் எடுத்துக்கூறி வருகிறோம். நமது கவலையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.