திருக்கார்த்திகை உற்சவ விழா; கொடியேற்றம் இன்று நடக்கிறது
பாலக்காடு; பாலக்காடு அருகே, திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோவில் திருக்கார்த்திகை உற்சவ விழா கொடியேற்றம் இன்று நடக்கிறது.கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ளது திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை உற்சவம் நடப்பது வழக்கம்.நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம், இன்று மாலை 6:00 மணிக்கு கோவில் தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடின் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து, 13ம் தேதி வரை நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மலம்புழா எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைக்கிறார். மலபார் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் முரளி பேசுகிறார்.திருகார்த்திகை நாளான, 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு உற்சவ விழாவின் சிறப்பு அம்சமாக பத்தர்கள் சுற்றுவிளக்கேற்றி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகவதி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை தலைவர் தம்பான், உற்சவர் கமிட்டி செயலாளர் நாராயணன்குட்டி, நிர்வாக அதிகாரி அகில் விஷ்ணு ஆகியோர் செய்து வருகின்றனர்.