| ADDED : டிச 30, 2025 12:59 PM
திருவனந்தபுரம்; திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் நடத்திய முப்பெரும் விழாவில், தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பக வெளியீடான ‛வைரஸ்' நுால் அறிமுகம் செய்யப்பட்டது.திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கமும் இனிய நந்தவனம் மாத இதழும் இணைந்து கவியரங்கம், கருத்தரங்கம், பாரதி விழா என முப்பெரும் விழாவைத் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க பி.ஆர்.எஸ் அரங்கில் நடத்தியது. ஆறு அமர்வுகளாக நடந்த விழாவில் தொடக்க நிகழ்விற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் மு.முத்துராமன் தலைமை வகித்தார். எழுத்தாளர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்றார். தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் வீராணம் சு.முருகன், முன்னாள் தலைவர் மா. நயினார், செயலாளர் எஸ்.மோதிலால் நேரு ஆகியோர் பேசினர்.திருவனந்தபுரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா கமலா எழுதி மலையாளத்தில் விருதுகள் பெற்ற ‛வைரஸ்' என்ற நாவலை, தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ளது. இதனை தினமலர் மதுரை பதிப்பு செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ் குமார் மொழிபெயர்த்துள்ளார். இந்நுாலை அறிமுகம் செய்து எழுத்தாளர் பா.தென்றல் பேசினார்.பொருளாளர் பி.விஜயகுமார் நன்றி கூறினார். தொடர்ந்து கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் இரா.ராமகுமார், இளவரசி, நித்தியாகோபாலன், சக்தி வேலாயுதம், ஷிவானி சதீஷ், ஆதிபகவன், சரஸ்வதி, மணியன், உஷா தேவி, இரா.செல்வமணி, நா.ராசசெல்வம், காஞ்சி கிருபா, சூரியகுமாரி ராதாகிருஷ்ணன், பகவதி மோதிலால், சாய் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.புலவர் கு.ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் கே.ஜெயலஷ்மி தொகுத்து வழங்கினார்.