உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,கில் வாழும் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்: ஜெய்சங்கர் பதில்

பாக்.,கில் வாழும் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்: ஜெய்சங்கர் பதில்

புதுடில்லி: '' பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை தொடர்பாக ஷாஜஹான்பூர் பா.ஜ., எம்.பி., அருண்குமார் சாகர் லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: உறுப்பினர் வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். அவரது கேள்வியில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை இந்தியா கண்காணிக்கிறதா என்பது. இரண்டாவதாக சர்வதேச அளவில் இதைப் பற்றி நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து.முதல் பகுதிக்கு எனது பதில் ஆமாம். அந்நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நாங்கள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். கடந்த பிப்., மாதத்தில் மட்டும் ஹிந்து சமுதாயத்திற்கு எதிராக 10 அட்டூழிய வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் ஏழு கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பானவை. இரண்டு கடத்தல் தொடர்பானவை. ஒன்று ஹோலி கொண்டாடும் மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பானது.பாகிஸ்தானில் ஒரு வழக்கில் சிக்கிய சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் ஒரு பழைய குருத்வாராவை மீண்டும் திறந்ததால் ஒரு சீக்கிய குடும்பம் அச்சுறுத்தப்பட்டது. அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்ததாக வழக்கு உள்ளது.அகமதியா சமுதாய மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு வழக்கில் ஒரு மசூதிக்கு சீல் வைக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் 40 கல்லறைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மன நிலை சரியில்லாத கிறிஸ்தவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.சர்வதேச அளவில் இந்த பிரச்னைகளை இந்தியா கொண்டு செல்கிறது. பிப்., மாதத்தில் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள நமது பிரதிநிதி, பாகிஸ்தானில் மனித உரிமைகள் மீறல், துஷ்பிரயோகம், சிறுபான்மையினரை துன்புறுத்தல், ஜனநாயக மதிப்புகளை திட்டமிட்ட முறையில் சீர்குலைத்தல் ஆகியவை அரசுக் கொள்கைகளாக இருப்பதை சுட்டிக்காட்டியது. மேலும், ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் யாருக்கும் போதனை செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மார் 28, 2025 20:36

கூடவே தமிழகத்தில் வாழும் ஹிந்துக்களின் நிலைமையையும் கண்காணித்து, ஹிந்துக்களை சீண்டிப்பார்க்கும் திமுகவுக்கு பாடம் கற்பிக்கவேண்டும்.


A1Suresh
மார் 28, 2025 19:14

ரம்ஜான் அன்று பாகிஸ்தானிலிருந்து ஏதோ பெரிய செய்தி காத்திருக்கிறதாமே ஜெய்ஹிந்த்...


Appa V
மார் 28, 2025 21:08

ஜெயஹிந்திபுரம் போன்ற அமைதி விரும்பிகளுக்கு ரம்ஜான் முபாரக்


சமீபத்திய செய்தி