தொழிலதிபர்கள் மஸ்க், விவேக் தலைமையில் அரசின் நிர்வாக சீரமைப்புக்கு தனி துறை அமெரிக்க அதிபர் தேர்வு டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன் : அரசு நிர்வாகத்தை சீரமைக்கவும், தேவையற்ற செலவுகளை குறைக்கவும் ஆலோசனை வழங்குவதற்காக, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், விவேக் ராமசாமி தலைமையில் தனி துறையை, அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 20ல் அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் இடம்பெற உள்ளோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அரசு நிர்வாகத்தை சீரமைக்க, டி.ஓ.ஜி.இ., எனப்படும் அரசு செயல்திறன் துறை உருவாக்கப்படும் என, டிரம்ப் பலமுறை கூறியிருந்தார். அதன்படி, தன் புதிய அரசில், அரசு நிர்வாக சீரமைப்புக்காக தனி துறை உருவாக்குவதாகவும், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி தலைமையில் இது இயங்கும் என, டிரம்ப் நேற்று அறிவித்தார்.இது குறித்து, டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:அமெரிக்க அரசின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தவும், அமெரிக்கர்களின் வாழ்க்கைத் திறனை சுலபமாக்கவும், அரசு செயல்திறன் துறை உருவாக்கப்படுகிறது. இந்த துறை, அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், தனியாக இருக்கும். அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், தேவையற்ற செலவுகளை குறைப்பது, நடைமுறைக்கு தேவையில்லாத விதிகள், சட்டங்கள், கட்டுப்பாடுகளை குறைப்பது போன்றவற்றில் ஆலோசனை வழங்கும். அமெரிக்காவை காப்பாற்றுவோம் என்ற எங்களுடைய கோஷத்துக்கு வலு சேர்ப்பதாக இது இருக்கும்.டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், இந்திய வம்சாவளியான பிரபல தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர், தங்களுடைய நிர்வாகத் திறன்களை பயன்படுத்தி, இந்த புதிய துறையின் வாயிலாக, நாட்டை வளப்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்குவர்.வரும் 2026 ஜூலை 4ம் தேதி, நாட்டின் சுதந்திரம் பிரகடனப்படுத்தியதன், 250வது ஆண்டை கொண்டாட உள்ளோம். அந்த நாளுக்குள், இந்த புதிய துறை தன் ஆலோசனைகளை வழங்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மென்மையாக நடக்க மாட்டோம்!
விவேக் ராமசாமியின் பெற்றோர், கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை இன்ஜினியர், தாய் டாக்டர். அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்தாலும், தன்னை ஹிந்துவாகவே காட்டிக் கொண்டுள்ளார் விவேக் ராமசாமி, 39. உயிரி தொழில்நுட்பம் உட்பட பல தொழில்களை நடத்தி வரும் இவர், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், ஒரு கட்டத்தில் வெளியேறி, டொனால்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார்; அவருடைய தீவிர ஆதரவாளராக மாறினார்.டிரம்பின் புதிய அரசில், விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜே.டி. வான்ஸ், ராஜினாமா செய்துள்ள ஒஹியோ மாகாணத்தின் செனட் எம்.பி., பதவிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடவும் விவேக் ராமசாமி திட்டமிட்டிருந்தார்.தனக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நாங்கள் மென்மையாக நடந்து கொள்ள மாட்டோம் என்பதை மட்டுமே தெரிவிக்க விரும்புகிறேன். செனட் இடைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, குறிப்பிட்டுள்ளார்.