உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.எஸ்., பயங்கரவாத வழக்கில் கோவையை சேர்ந்த இருவர்.. குற்றவாளிகள்! : உறுதி செய்தது கொச்சி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம்

ஐ.எஸ்., பயங்கரவாத வழக்கில் கோவையை சேர்ந்த இருவர்.. குற்றவாளிகள்! : உறுதி செய்தது கொச்சி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: தமிழகம் மற்றும் கேரளாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்காக ஆள்சேர்ப்பு மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த இருவரை குற்றவாளிகள் என கொச்சி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2019ல், கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தொடர்பான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில், உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், 27, ஷேக் ஹிதயதுல்லா என்ற பெரோஸ் கான், 35 ஆகியோர், இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேச பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், இந்த வழக்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற இருவரும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டதும், பிரசாரம் மேற்கொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 2019ல், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் என்.ஐ.ஏ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆள் சேர்ப்பு அதில், 'குற்றஞ்சாட்டப்பட்ட அசாருதீன் மற்றும் ஹிதயதுல்லா, 2016 முதல் பயங்கரவாதம் தொடர்பான பிரசாரத்தை முன்னெடுத்து வந்துள்ளனர். அவர்களுடன் மேலும் சிலர் இணைந்து சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து, ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 'இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுடன் இருவரும் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பயங்கரவாத பிரசாரம் மேற்கொண்டதற்கான, 'டிஜிட்டல்' ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கேரளாவின் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதி சேஷாத்ரிநாதன் தலைமையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தண்டனை அப்போது, 'சதி திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பை ஆதரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அசாருதீன், ஹிதயதுல்லா இருவரும் குற்றவாளிகள்' என, நீதிபதி அறிவித்தார். தண்டனையை அறிவிக்க, இருவரையும் நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் போது, நீதிபதி முன் ஆஜரான அசாருதீன் மற்றும் ஹிதயதுல்லா இருவரும், குடும்ப பின்னணியை கருத்தில் வைத்து குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை