கேரளாவில் தொடர் வழக்குகளில் சிக்கிய இரு இளம் பெண்கள் குண்டாசில் கைது
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருச்சூரில் தொடர் வழக்குகளில் சிக்கிய இரண்டு இளம் பெண்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.திருச்சூர் அருகே திருப்பரையாரை சேர்ந்தவர் சுவாதி 28. வலப்பாடுப் பகுதியைச் சேர்ந்தவர் இயானி ஹிமா 25. இவர்கள் இருவரும் அடிக்கடி பல்வேறு வழக்குகளில் சிக்கி வந்துள்ளனர். ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே கடந்த ஆண்டு இரண்டு பேரும் சேர்ந்து நாட்டிகா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடத்திச் சென்று லாட்ஜ் அறையில் பூட்டி வைத்து தாக்கி 5 ஆயிரம் ரூபாய், ஒன்றேகால் லட்சம் ரூபாய் மதிப்பிலான அலைபேசியை பறித்தனர். இதில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்த இருவரும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டனர் . சில நாட்களுக்கு முன் வலப்பாடு என்ற பகுதியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது அதிகமான வழக்குகள் பதிவாகி வந்ததால் வலப்பாடு போலீசார் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.