ராகுல் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம்: சவுகான் கருத்து
புதுடில்லி: '' பார்லிமென்டில் நடந்ததற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை,'' என மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பார்லிமென்டில் நடந்து கொண்டதற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் காங்., தலைவர் கார்கேயும், ராகுலும் மன்னிப்பு கேட்பார்கள் என நம்பினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. தங்களது பிரச்னைகளை எழுப்ப ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்று பார்லி., வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்கள் போராட்டம் நடத்திய போது, ராகுல் வேண்டும் என்றே அங்கு சென்றார். வேறு வழியில் செல்லும்படி பாதுகாவலர்கள் கூறிய போதும், அதனை மீறி சென்று பா.ஜ., எம்.பி.,க்களை தள்ளிவிடத் துவங்கினார்.ராகுல் ரவுடியை போல் நடந்து கொண்டார். அவர் தள்ளியதால், பா.ஜ.,வின் மூத்த எம்.பி., கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு ஐசியூ.,வில் சிகிச்சை அளிக்கப்படுகிறது அவர் சுயநினைவின்றி உள்ளார். அவரது ஸ்கேன் அறிக்கையில் பிரச்னை இல்லை என தெரியவந்துள்ளது. பார்லிமென்ட் வளாகத்தில் உடல் பலத்தை பிரயோகிக்கலாமாஆதிவாசி எம்.பி., பங்னோன் கோன்யக், கூறியது மிகுந்த வேதனை அளிக்கிறது. தான் முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக அவர் ராஜ்யசபா தலைவரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது கண்ணீருடன் மனு அளித்ததாக அவைத்தலைவர் கூறியுள்ளார். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
நலம் விசாரித்தார் ராஜ்நாத்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ., எம்.பி.,க்களிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார். பிறகு ராஜ்நாத் சிங் கூறியதாவது: பிரதாப் சாரங்கி தலையில் இரண்டு தையல்கள் போடப்பட்டு உள்ளன. இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இன்னும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தில் நடக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.