மும்பை: மஹாராஷ்டிரா அரசின் பதவியேற்பு விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்வதற்காக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. 288 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் 'மஹாயுதி' கூட்டணி, 233ல் வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிவசேனா 57, மற்றும் தேசியவாத காங்., 41 இடங்களில் வென்றன. பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதால், சிவசேனா தலைவர் ஏகநாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கொடுக்க விரும்பவில்லை. இதனால், அடுத்த முதல்வர் யார் என்பதில் மஹாயுதி கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. முதல்வர் விவகாரத்தில் பா.ஜ., எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறிய தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்துறை உட்பட 12 முக்கிய துறைகளை தங்களின் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு சம்மதிக்காத பா.ஜ., மராத்தி சமூகத்தினரிடையே செல்வாக்கு கொண்ட ஏக்நாத் ஷிண்டேவை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பரபரப்பான இந்த அரசியல் சூழலில், வரும் டிசம்பர் 5ம் தேதி மும்பையில் உள்ள ஆஷாத் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், புதிய அரசு பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் தான் தேர்வு செய்யப்படுவார் என்ற நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்றோ அல்லது நாளையோ பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனால், முதல்வர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.