பெங்களூரு: ''பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணியால் பின்னடைவு ஏற்படும் என்று ஏற்கனவே யூகிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து, அதை சரி செய்து கொள்வோம்'' என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில் கர்நாடகா உட்பட தேசிய அளவில், காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராய, தேசிய அளவில் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தலைமையில் சத்ய சோதனை கமிட்டியை காங்கிரஸ் அமைத்துள்ளது.இந்த கமிட்டி, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில், கர்நாடக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் கூறியதாவது: 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோம். ஆனால், 14 முதல் 15 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது முடியாமல் போனது. எந்த இடத்தில் தவறு செய்துள்ளோம் என்பதை ஆராய்ந்து, அதை சரி செய்து கொள்ள முயற்சிக்கப்படும்.கர்நாடகா மட்டுமின்றி, நாடு முழுதும் இந்த கமிட்டி ஆலோசனை நடத்த உள்ளது. கர்நாடகா தரப்பில், நானும் நான்கு மண்டலங்களில் வெற்றி, தோல்வி குறித்து கட்சி மேலிடத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளேன். லோக்சபா தேர்தலில், இம்முறை மிகவும் சிறந்த வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து, தேர்தலை எதிர்கொண்டோம். பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணியால் பின்னடைவு ஏற்படும் என்று ஏற்கனவே யூகிக்கப்பட்டது. எதிர்காலத்திலும், அவர்கள் கூட்டாக இருப்பர் என்று தெரியும். அவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களை தயார்படுத்தி கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.