உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்கள் புள்ளி இணைத்து கோலம் போடுவதை புகழ்ந்த பிரதமர் மோடி

பெண்கள் புள்ளி இணைத்து கோலம் போடுவதை புகழ்ந்த பிரதமர் மோடி

புதுடில்லி: புதுடில்லியில், மத்திய இணை அமைச்சர் முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் புள்ளி இணைத்து கோலம் போடுவதை புகழ்ந்து பேசினார். மேலும், பல தரப்பினர் இணைந்து செயல்பட்டால், நாடு முன்னேற்றம் அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.முன்னேற்றம் அடையும் என பேச்சுதலைநகர் புதுடில்லியில் உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகன் வீட்டில் பொங்கல் பண்டிகை விழா நேற்று நடந்தது. இதில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார்.

முக்கிய பங்கு

இந்த விழாவில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், 'தினத்தந்தி' நாளிதழ் அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்' என, தமிழில் வாழ்த்து கூறினார். அவர் தொடர்ந்து பேசியதாவது:தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. வரவிருக்கும் பண்டிகை காலங்களில், நாட்டு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு தொடர என் வாழ்த்துகள்.கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பார்த்த முகங்களை தற்போது காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடும் உணர்வை தருகிறது. என்னை இந்த விழாவுக்கு அழைத்த அமைச்சர் முருகனுக்கு நன்றி.தேசத்தை கட்டமைப்பதில், படித்தவர்கள், நேர்மையான தொழிலதிபர்கள், நல்ல விளைச்சல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன என, திருவள்ளுவர் கூறியிருக்கிறார். பொங்கல் பண்டிகையின் போது புதிய விளைச்சல் கடவுளுக்கு படைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் விழாக்கள் விவசாயிகளுடனும், விளைச்சல்களுடனும் தொடர்புடையதாக இருக்கின்றன.மிகச் சிறந்த உணவான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், பல இளைஞர்கள் அதன் வாயிலாக, 'ஸ்டார்ட் அப்' நிறுவன முயற்சிகளை மேற்கொள்வதும் மகிழ்ச்சியாக உள்ளது.

புதிய வலிமை

சிறுதானியங்களுக்கான ஊக்குவிப்பால், அதன் விவசாயத்தில் ஈடுபடும் மூன்று கோடி விவசாயிகள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.தமிழகத்தில், வீட்டின் வாசலில் பெண்கள் பல்வேறு புள்ளிகள் வைத்து, அவற்றை ஒன்றாக இணைத்து கோலத்தை உருவாக்குகின்றனர். அந்த ஒவ்வொரு புள்ளிகளும் தனித்தனி முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் அவற்றை ஒன்றாக இணைத்து வண்ணமிடும் போது, கோலம் அதன் உண்மையான அர்த்தத்தை பெறுகிறது. இந்த கோலம் போலத்தான் இந்தியாவும், வெவ்வேறு உணர்வுகளுடன் இருக்கும் நாட்டின் பல்வேறு மூலைகளையும் ஒன்றாக இணைக்கும் போது, தேசம் புதிய வலிமையை பெறுகிறது.'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வை, பொங்கல் பண்டிகை பிரதிபலிக்கிறது. காசி தமிழ் சங்கமம் மற்றும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் வாயிலாக துவங்கப்பட்ட பாரம்பரியத்திலும் இதே உணர்வை காணலாம். இந்த உணர்வு, வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.செங்கோட்டையில் இருந்து நான் அறிவித்த ஐந்து உறுதிமொழிகளில் முக்கிய அம்சம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாகும்.இந்தப் பொங்கல் விழாவில் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த நம்மை அர்ப்பணிப்போம் என, மீண்டும் நாம் உறுதியேற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதன் பொருள்: நாட்டு மக்களின் தேவைக்கு குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோரும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடு என்பதாகும்.

குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை