உளவியல் போருக்காக பெண்கள் படை பயங்கரவாத அமைப்பு ரகசிய திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் -- இ - முகமது பயங்கரவாத அமைப்பு, நம் நாட்டிற்குள் உளவியல் ரீதியிலான தாக்குதலை நடத்த ரகசிய பெண்கள் படையை உருவாக்கி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரிக்கவும், பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், முற்றிலும் பெண்கள் இடம்பெறும் ரகசிய படையை ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவியல் ரீதியில் தாக்குதல்களை மேற்கொள்ள இந்த பெண்கள் படைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக தவறான தகவல்களை பரப்புவது, பொதுமக்களின் மனநிலையை பாதிக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட சதி வேலைகளில் பெண்கள் படையினர் ஈடுபட உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் தென் மாநிலங்களில் இஸ்லாமிய பெண்களை மூளைச்சலவை செய்து, தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த படை உருவாக்கப்பட்டு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதற்காக ஆன்மிக போர்வையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு ஒரு திட்டம் தீட்டியுள்ளது. அதன் அடிப்படையில், நகர்ப்புறங்களில் வசிக்கும் படித்த இஸ்லாமிய பெண்களை அணுகும் ரகசிய பெண்கள் படையினர், படிப்படியாக அவர்கள் மனதில் பயங்கரவாத கருத்துகளை புகுத்துவர்; அதில் ஈர்க்கப்படுவோரை, தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு பயன்படுத்திக் கொள்ளும். மேலும், இந்த பெண்கள் படை வாயிலாக மதக்கூட்டங்கள் நடத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டவும் அந்த அமைப்பு திட்ட மிட்டுள்ளது. இந்தியா நடத்திய சிந்துார் ஆப்பரேஷனுக்கு பின், இந்த சதி திட்டத்தை ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு தீட்டிஉள்ளது. இந்த புதிய உத்தி, பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என, உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.