வெளிநாடு சென்று படிக்கலாம்
வெளிநாடு சென்று படிக்க ரூ. 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை செலவாகும். இது நாடு, யுனிவர்சிட்டி, படிப்பு, மாணவரின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறும். பொதுவாக முதுநிலைப்படிப்பை வெளிநாடு சென்று படிக்க கல்வி செலவு மற்றும் தங்கும் செலவுடன் சேர்த்து ரூ.5 முதல் 18 லட்சம் வரை ஆகும். ஸ்காலர்ஷிப், பெல்லோஷிப், அசிஸ்டன்ட்ஷிப், மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கட்டண விலக்கு சலுகைகளும் மாணவர்களுக்கு கிடைத்தால் செலவு குறையும். தகுதியான மாணவர்களுக்கு இந்திய பன்னாட்டு நிறுவனங்களும் ஸ்காலர்ஷிப்கள் வழங்குகின்றன. கடந்த சில வருடங்களாக எந்த பிணையும் இல்லாமல் மாணவர்களுக்கு கடன் வழங்க அரசு வங்கிகளும், தனியார் வங்கிகளும் போட்டி போடுகின்றன. எளிதான வழியில் திருப்பிச்செலுத்தும் வசதியையும் வழங்குகின்றன. இதற்கு 2 முதல் 3 வாரங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் எடுத்துக்கொள்கின்றன. படிப்பை நிறைவு செய்தவுடன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் தான் ஒவ்வொரு மாணவரும் வெளிநாட்டுக்கு படிக்க செல்கிறார். வெளிநாட்டு படிப்புக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதால் இந்த எண்ணம் நியாயமானதே. படிப்பை முடித்த பின் வேலை வாய்ப்பு நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. வெளிநாட்டில் படிக்கும் மாணவன் சர்வதேச அளவில் போட்டி போட வேண்டிய நிலை உள்ளதால் அதற்கு ஏற்ப தனது தகுதியையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா, கனடா, நியுசிலாந்து போன்ற நாடுகளில் மாணவர்கள் நிரந்தரமாக தங்கும் வசதி செய்து தரப்படுகிறது. அதற்கு சில தகுதிகளை வரையறுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் படித்த இந்தியர்களை பணிக்கு அமர்த்த ஆர்வம் காட்டுகின்றன. சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பல வசதிகள் இருப்பதால் மாணவர்களும் இதனை விரும்புகின்றனர். எப்போதும் தேர்வு செய்யும் படிப்பை விட கல்வி நிறுவனமே வேலைவாய்ப்பை தேடித்தருவதில் முன்னணி வகிக்கிறது. எனவே திட்டமிட்டு, தயாராகி, சிறந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதே பாதுகாப்பானது. -முற்றும்