உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்தும்... அவலம்; செங்குறிச்சி பள்ளிக்கு புதிய கட்டடம் எப்போது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை தாலுகா செங்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியாக கடந்த 1929ம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்னர் 1961ல் நடுநிலைப் பள்ளியாகவும், கடந்த 1996ம் ஆண்டு உயர் நிலை பள்ளியாகவும், கடந்த 2017 ஆண்டு மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது இப்பள்ளியில் 470 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 18 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். நுாற்றாண்டு காணவுள்ள இப்பள்ளியின் பரப்பளவு அதே நிலை தான் நீடித்து வருகிறது. ஆனால் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.மாணவர்கள் அதிகரித்த போதிலும் கூடுதல் வகுப்பறை கட்ட வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மரத்தடியிலும் மாணவர்கள் உட்கார்ந்து படிக்க போதிய இடவசதியில்லாததால் பள்ளிக்கு அருகே உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இடப்பற்றாக்குறையால் நாடோடிகளை போல அங்கும் இங்கும் என படித்து அலைகின்றனர்.ஆசிரியர்களும். பொதுமக்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு வேண்டிய இடவசதியையும், வகுப்பறை கட்டட வசதியும் ஏற்படுத்தித் தராமல் மவுனம் காத்து வரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ., போக்கால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இந்நிலையில் செங்குறிச்சி பள்ளி அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு வந்திருந்த கலெக்டர்,எம்.எல்.ஏ.,விடம் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பள்ளி நிலை குறித்து நேரில் பார்த்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.அதன்பேரில் பள்ளி வளாகத்திற்குள் வந்த கலெக்டர், எம்.எல்.ஏ., மரத்தடியில் மாணவர்கள் கல்வி போதிக்கும் நிலையை கண்டு கொள்ளாமல் வந்த சிறிது நேரத்திலேயே வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்