உள்ளூர் செய்திகள்

பதில் சொல்வதற்கு அல்ல; கேள்வி கேட்கத் தான் கல்வி! பெற்றோருக்கு பர்வீன் சுல்தானா டிப்ஸ்

மேட்டுப்பாளையம்: மோத்தேபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 12ம் ஆண்டு விழா நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மணிமேகலை தலைமை வகித்தார். செயலர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். எட்டாம் வகுப்பு மாணவி ஸ்மிர்தி வரவேற்றார்.எஸ்.எஸ்.வி.எம்., நிர்வாக இயக்குனர் ஸ்ரீஷா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பேராசிரியை பர்வீன் சுல்தானா பரிசுகள் வழங்கி பேசியதாவது:கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், கற்கக் கூடிய மாணவர்களுக்கும், இவர்களை நிர்வகிக்கும் நிர்வாகத்திற்கும் விழிப்புணர்வு அவசியம்.குழந்தைகள் வளரும் பொழுது, பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ஆனால், அவர்களை ஒரு கட்டத்திற்குள் அடைக்காதீர்கள்.பெற்றோர்கள் குழந்தை வளர்க்கும் போது, மூன்று நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும். ஒன்று, குழந்தைகளுடன் அதிக நேரம் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டு, ஆரோக்கியமாக இருக்க கற்றுத் தர வேண்டும். மூன்று, கடன் இல்லாமல் வாழ கற்றுத் தர வேண்டும். இவை மூன்றும் ஒரு குழந்தை சமூக பொறுப்புடன் மரியாதையுடன் வாழ உதவும்.கல்வி என்பது பதில் சொல்வதற்கு அல்ல; மாறாக கேள்வி கேட்பதற்கானது. ஒவ்வொரு விஷயத்தையும் கேள்வி கேட்டு தெளிவு பெறுவது தான் கல்வி கற்பதன் உண்மையான பயன். குழந்தைகள் விலைமதிப்பற்றவர்கள். அவர்களை கனிவுடன் காப்பாற்றுங்கள். சுதந்திரமாக இருக்க பழகுங்கள், சுதந்திரத்திற்கு மற்றொரு பெயர் தான் கல்வி.இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார். எண்ணங்களே நல்வார்த்தையையும், நல்வாழ்க்கையையும் வடிவமைக்கின்றன என்ற நோக்கில் சமஸ்கிருத வர்ணா என்னும் கருத்துருவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளி முதல்வர், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மாணவன் ஹர்ஷித் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்