உதவி பேராசிரியர் தேர்வு முடிவு தாமதம்; நிதி பற்றாக்குறை காரணம் என தகவல்
சென்னை: அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால், உதவி பேராசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக உயர் கல்வித் துறை கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ், 175 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 15,000 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில், 4,711 பணியிடங்களில் நிரந்தர பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.மீதமுள்ள பணியிடங்களில், 8,000க்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள், 25,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2019ம் ஆண்டு, 2,331 உதவி பேராசிரியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அதன் பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர் நியமிக்கப்படுவர் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு அக்., 16ல், 48 பாடப்பிரிவில் உள்ள 2,708 காலிப்பணியிடங்களை, போட்டித் தேர்வு வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.அப்போது, கடந்த அ.தி.மு. க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 2,331 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. அக்டோபரில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு, கடந்த டிச., 27ல் நடந்தது.மாநிலம் முழுதும் 42,064 பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கான விடைக்குறிப்பு, கடந்த மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. ஜனவரிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. தற்போது முடிவுகளை வெளியிட்டு, பணி நியமன ஆணை வழங்கினால், அவர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.'எனவே, தேர்வு முடிவு வெளியிடுவதை ஒத்தி வையுங்கள்' என, அரசு தரப்பில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தேர்வு முடிவு வெளியாகாததால், தேர்வு எழுதியவர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.குறிப்பாக, தனியார் கல்லுாரிகளில் தற்காலிகமாக பணியாற்றுவோர், தேர்வு முடிவு தெரிந்தால் தற்போதைய பணியை தொடரலாமா அல்லது விட்டுவிடலாமா என முடிவெடுக்க முடியும். தற்போது அது முடியாததால், அவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இல்லையெனில், கடந்த ஆட்சியில் நடந்தது போல் நடக்க வாய்ப்புள்ளது.எனவே, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு எழுதியவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.