உள்ளூர் செய்திகள்

நிலவில் நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை வெளியிட்டது நாசா

வாஷிங்டன்: நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.அமெரிக்க விண்வெளி மையமான, 'நாசா' தலைமையில், சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ் - 2 திட்டம் மூலம் 54 ஆண்டுக்குப் பின், முதல் முறையாக நிலவை நெருங்கிச் சென்றனர்.அந்த திட்டத்தை தொடர்ந்து, தற்போது நிலவில் நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. இதற்காக, 1.70 லட்சம் கோடி ரூபாய் செலவிட உள்ளனர்.இந்த திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில், 'ரோவர்கள், ட்ரோன்'கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய நிரந்தர தளத்தை அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது.இதில், 'ரோவர்' என்பது கேமராக்கள், சென்சார்கள் மற்றும் கற்கள், மணல் சேகரிக்கும் இயந்திர கைகள் கொண்ட வாகனம் ஆகும். ட்ரோன்கள் என்பவை ஆளில்லா சிறிய ரக விமானங்கள்.இத்திட்டம் குறித்து நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு திரும்புகிறது. நிலவில் அமைக்கப்படும் ஆய்வு தளம் மனிதகுலத்தின் முதல் நிரந்தர வெளி உலக தளமாக இருக்கும்.இந்த ஆய்வு தளம், நிலவின் ஆபத்தான சூழலில் மனிதர்கள் எப்படி வாழ்வது, செயல்படுவது என்பதை கற்றுக்கொள்ள உதவும். அங்கு ரோவர்கள், ட்ரோன்கள் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் இடம் பெறும்.வரும் 2028ல் சந்திரனில் விண்வெளி வீரர்களை இறக்கி விடுவது தான் எங்கள் இலக்கு. அதற்காக இந்த ஆண்டே மூன்று விண்கலனை அனுப்பி தொழில்நுட்பங்களை சோதித்து, எதிர்கால விண்வெளி வீரர்களின் பயணத்திற்கு அடித்தளம் அமைக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்