சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு
தினமலர் இதழ் செய்தி எதிரொலியால் சிதம்பரத்தில் குப்பை கொட்டும் இடம் மற்றும் சுடுகாட்டிற்கு அருகே இயங்கிய தொடக்கப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி புதிய கட்டடம் கட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் அடுத்த சி.தண்டேஸ்வரநல்லூரில் கழிவுகளை கொட்டும் இடம் மற்றும் சுடுகாடு அருகே சுகாதார சீர்கேடான இடத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. படிப்பதற்கு லாயகற்ற நிலையிலும், நோய் பரவும் அபாயகரமான சூழ்நிலை இருப்பதால் உடனடியாக பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் மற்றும் தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி சார்பில் கலெக்டர் அமுதவல்லியிடம் மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பள்ளியின் நிலை குறித்து தினமலர் இதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பள்ளியை உடனடியாக சிவஜோதி நகர் விளையாட்டு மைதானம் உள்ள இடத்திற்கு மாற்றவும், புதிய பள்ளி கட்டடம் கட்டவும் கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.