நிவாரண முகாம், மழைநீர் தேங்கிய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரியில் மழைநீர் தேங்கிய மற்றும் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், மழை நிவாரண முகாம்களாக செயல்படுவதாலும், தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, மூலக்குளம், கூனிச்சம்பேட், கரையாம்புத்துார், சின்ன கரையாம்புத்துார், கடுவனுார், கிருஷ்ணாவரம், மணமேடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல பண்டசோழநல்லுார், மணலிபட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கும், உறுவையாறு, மங்கலம், திருக்கனுார், பனித்திட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கரையாம்புத்துார் - அரசு மேல்நிலைப்பள்ளி; முத்தியால்பேட்டை - சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ; கூனிச்சம்பட்டு - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி; மற்றும் பாகூர் கொம்யூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்றும் வழக்கம் போல செயல்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.