பி.எட்., மாணவர்களின் ஸ்வயம் படிப்புக்கு மாற்றாக நான்கு புது வழிமுறைகள் அறிமுகம்
பி.எட்., படிப்போர், 'ஸ்வயம்' படிப்பில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி, நான்கு புதிய வழிமுறைகளை, கல்வியியல் பல்கலை அறிமுகம் செய்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் பல்கலையின் கீழ், ஐந்து அரசு கல்வியியல் கல்லுாரிகள்; 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள்; 662 சுயநிதி கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லுாரி களில், பி.எட்., எம்.எட்., படிப்புகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர்.கல்வியியல் கல்லுாரிகளில், 2020 - 21ம் கல்வியாண்டு முதல், எம்.எட்., பட்டப்படிப்புக்கும், 2021 - 22ம் கல்வியாண்டு முதல், பி.எட்., பட்டப்படிப்புக்கும், 'சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்' எனும், சி.பி.சி.எஸ்., செமஸ்டர் தேர்வு பாடத்திட்ட முறை அறிமுகம் செய்யப்பட்டது.மிகுந்த சிரமம் அதன்படி, பி.எட்., படிக்கும் மாணவ - மாணவியர், மூன்றாம் செமஸ்டர் தேர்வின் போது, 'ஸ்வயம்' திட்டத்தில், 'பெடகாஜி' மற்றும் கல்வியியல் போன்ற ஆன்லைன் பாடங்களை படித்து, தேர்வு எழுத வேண்டும்.இதில், 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோருக்கு, செமஸ்டர் தேர்வில், 20 மதிப்பெண் வழங்கப்படும்.பி.எட்., படிக்கும் மாணவ, மாணவியர், கட்டாயம், 'ஸ்வயம்' ஆன்லைன் படிப்பில், தேர்ச்சி பெற வேண்டும். 'ஸ்வயம்' வகுப்புகள் முழுதும், ஆன்லைனில் நடப்பதால், கிராமப்புற மாணவ, மாணவியர், மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் மாதம் நடந்த, 'ஸ்வயம்' தேர்வின் போது, தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில், தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.'ஸ்வயம்' படிப்பை முடிப்பதற்குள், கிராமப்புற மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாற்று வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என, மாணவர்கள், கல்லுாரி முதல்வர்கள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, மாற்று வழிமுறைகளை உருவாக்கி உள்ளது.ஆன்லைன் படிப்பு அதன்படி, பி.எட்., மாணவ, மாணவியர், கல்வியியல் படிப்பு சார்ந்த, ஏதேனும் ஒரு ஆன்லைன் ஸ்வயம் படிப்பு; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்தும், ஆன்லைன் படிப்பு.யோகா, உடல்நலம் மற்றும் உடற்கல்வி பாடம் சார்ந்து ரெக்கார்டு எழுதுதல்; கல்வியியல் தொழில்நுட்பம் சார்ந்து ரெக்கார்டு எழுதுதல் என, நான்கு மாற்று வழிமுறைகளை, கல்வியியல் பல்கலை அறிமுகம் செய்துள்ளது.இவற்றில் ஒன்றை தேர்வு செய்து தேர்ச்சி பெறுவோருக்கு, 20 மதிப்பெண் வழங்கப்படும்.பல்கலையின் கல்விக்குழு வழங்கிய பரிந்துரையின்படி, 'செனட்' அனுமதியுடன், புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயனடைவர் என, பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.