உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் இல்லா சமுதாயத்தை உருவாக்க உறுதி பூண்ட பிஎம்ஸ்ரீ பள்ளி மாணவர்கள்

தாவணகெரேயில் பிளாஸ்டிக் இல்லா சமுதாயத்தை உருவாக்க, பிஎம்ஸ்ரீ பள்ளி மாணவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.தாவணகெரே நகரின் நடுவள்ளியில் பிஎம்ஸ்ரீ அரசு பள்ளி உள்ளது. இங்கு, எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள், தற்போது மாநிலத்திலேயே முன்மாதிரி பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர்.இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயப்பா. இவர் தொடர்ந்து மாணவர்களிடம், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.அதன் பலனாக, பிளாஸ்டிக் ஆபத்து குறித்து தங்கள் அண்டை வீட்டாரிடம், இப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் காணப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளையும் சேகரித்து பள்ளியில் சேமித்து வருகின்றனர். பொதுஇடங்களில் கவனக்குறைவாக பிளாஸ்டிக்கை வீசுபவர்களிடம், அதை வீசக்கூடாது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.கடந்த, 2025 - 26ம் கல்வியாண்டில், மாணவர்களால் சேகரிக்கப்பட்ட, 869 கிலோ பிளாஸ்டிக், தாவணகெரே நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும், 150 கிலோ பிளாஸ்டிக்கை தங்கள் பள்ளியில் வைத்துள்ளனர்.இது துவிர, மதிய உணவு, குடிநீரை பிளாஸ்டிக் பாக்சில் கொண்டு வராமல், சில்வர், பித்தளை தண்ணீர் பாட்டில்களில் கொண்டு வருகின்றனர். இப்பள்ளியை சுற்றிலும் பிளாஸ்டிக்கை காண முடியாது.பிளாஸ்டிக்கிற்கு எதிரான போராட்டத்தில், 600 குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்கள், கடந்த மூன்று வாரங்களில் புதன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு பிளாஸ்டிக் கொண்டு வருவர்.பிஸ்கட் கவர்கள், சாக்லேட் கவர்கள், பால்பாக்கெட் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரித்து, பள்ளி வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் வீசுகின்றனர்.மாணவர்களின் இத்தகைய செயலுக்கு ஊக்குவித்த பள்ளி அனைத்து ஆசிரியர்களையும், பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் பாராட்டி உள்ளார். பள்ளி ஆசிரியர் ஜெயப்பா கூறியதாவது:மதிய உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் வாழைப்பழம், முட்டை ஓடுகளை பயன்படுத்தி, உரம் தயாரிப்பது தொடர்பான பரிசோதனை நடத்தி வெற்றியும் கண்டுள்ளனர்.பள்ளியில் தினமும், 600 மாணவர்கள் உட்கொள்ளும் வாழைப்பழ தோல்கள், முட்டை ஓடுகள், அவர்களின் கையால் பள்ளி வளாகத்தில் உள்ள கொள்கலனில் வைக்கப்படுகின்றன.தோல்கள் மாநகராட்சி வழங்கிய கொள்கலனில் போடப்பட்டு, அவற்றின் மீது உரப்பொடி துாவி, 10 நாட்கள் வைக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்தச் சோதனை ஒரு மாதமாக நடத்தப்பட்டு வருகிறது. நான்கு அல்லது ஐந்து கொள்கலன்களில் வைக்கப்படும் வாழைப்பழ தோல்கள், முட்டை ஓடுகள் ஏற்கனவே உரமாக மாற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்