நீட் வினாத்தாள் கசிவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது: தேர்வு முகமை தகவல்
வரும் 21ல் நடக்கும், 'நீட்' இளநிலை மறு தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்படாது என உறுதி அளிக்க, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.'நீட்' எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, நாடு முழுதும், மே 3ல் நடந்தது. இதை, 22 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரின்படி, அந்த தேர்வை என்.டி.ஏ., ரத்து செய்தது. வரும் 21ல், மறு தேர்வு நடக்கிறது.ராஜ்யசபா காங்., எம்.பி., திக்விஜய் சிங் தலைமையிலான, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு விவகாரங்களுக்கான பார்லி., நிலைக்குழுவின் கூட்டம், தலைநகர் டில்லியில் நடந்தது.இதில், பா.ஜ., எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத், சம்பித் பத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலைக்குழு முன், மத்திய உயர்கல்வி செயலர் வினீத் ஜோஷி, என்.டி.ஏ., தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் ஆகியோர் ஆஜராகினர்.அவர்களிடம், நீட் மறு தேர்விலோ அல்லது எதிர்காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளிலோ வினாத்தாள் கசிவு ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும்படியும், தேர்வில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பர் என்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.இதற்கு பதிலளித்த என்.டி.ஏ., தலைமை இயக்குநர் அபிஷேக் சிங், 'நீட் மறு தேர்விலோ அல்லது எதிர்காலத்தில் நடத்தப்படும் நீட் தேர்வுகளிலோ வினாத்தாள் கசிவு ஏற்படாது என, எங்களால் எந்த உறுதியையும் அளிக்க முடியாது. வினாத்தாள் கசிவை தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்' என, தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.