பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டிகள் தொடருமா: முன் மாதிரியாகுமா மாவட்ட பள்ளிகள்
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 'மாணவர் மனசு' ஆலோசனைப்பெட்டியும், தனியார் பள்ளிகளில் புகார் பெட்டியும் வைக்கப்பட முந்தைய ஆட்சியில் அறிவுறுத்தப்பட்டது.இதை பல பள்ளிகள் பின்பற்றவில்லை. ஆனாலும் சில பள்ளிகள் பின்பற்றி மாணவர்களின் புகார்களை பெற்று அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தனர். சமீபத்தில் விருதுநகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவரின் பையில் மதுபாட்டில் இருந்தது ஆசிரியரின் சோதனையில் தெரிந்தது.இது போன்ற நேரங்களில் பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தாலும், மாணவர் நலன் காப்பது, இடைநிற்றலை தடுக்க கூட்டு ஆலோசனை தேவை.இதில் உடன் பயிலும் சக மாணவர்களின் புகார்கள், வழிகாட்டுதல்கள் பெற இந்த ஆலோசனை பெட்டிகள் உதவியாக இருக்கும். நேரடியாக தெரிவித்தாலோ, ஆசிரியரிடம் கூறினால், பிறருக்கு தெரிந்து விடுமோ என்பதும் தடுக்கப்படும்.அதே போல் பாலியல் தொந்தரவுகளுக்கான புகார்களும் உடனடியாக தீர்வு காணப்படும். குறிப்பாக தற்போதைய அரசு அறிவித்துள்ள சிங்கப்பெண்கள் அதிரடிப்படை இந்த புகார்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மாணவர்களும் பாதுகாப்பான சூழலை உணர்வர்.வசிப்பிடங்களில் எதிர்கொள்ளும் சீண்டலை கூட இந்த மாணவர் மனசு பெட்டி மூலம் வெளிக் கொண்டு வர முடியும்.எனவே கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் தன் முனைப்பில் பள்ளிகளில் மீண்டும் மாணவர் மனசு அல்லது ஏதாவது பெயரில்ஆலோசனை, புகார் பெட்டியாக வைப்பதோடு, அது குறித்தான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநில அரசும் முன்மாதிரியாக செய்ய முன்வர வேண்டும்.