கடம்பமர ஆராய்ச்சிக்கு கிடைத்தது காப்புரிமை! வேளாண் பல்கலை ஆராய்ச்சி குழு சாதனை
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கடம்ப மரத்திலிருந்து, 'கடம்பின்' என்ற மருத்துவ குணம் வாய்ந்த உயிர்வேதிப்பொருளைப் பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்ததற்காக, மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.தமிழ் சங்க இலக்கியத்தில் அகநானுாறில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பழப்பெரும் கடம்ப மரம், வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.இந்த மரத்தின் மரப்பட்டை, காய்ச்சல் மற்றும் தோல் நோய்களைப் போக்கவும், இலைகள், புண்கள் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த மரத்தின் பழம் வலி நிவாரணியாக செயல்படுகிறது. இந்த சிகிச்சை பண்புகள் பலவற்றிற்கும் காரணமான கடம்ப மரத்தில் உள்ள கடம்பினைப் பிரித்தெடுக்கவும் அளவிடவும் கண்டறியப்பட்ட புதிய நடைமுறைக்குதான் காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது.“நியோலாமார்க்கியா கடம்பாவிலிருந்து அதிக அளவு கடம்பினை ஈட்டுவதற்கு, பிரித்தெடுப்பதற்கும் அளவிடுவதற்குமான புதிய முறை” என்ற தலைப்பில், இந்த கண்டுபிடிப்பை பேராசிரியர்கள் கோபால், செந்தில், வெள்ளைக்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது.இது குறித்து, நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலை (பொறுப்பு) துணைவேந்தர் சுப்பிரமணியன் ஆராய்ச்சிக் குழுவிற்கு காப்புரிமைச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்வில் முதுகலை படிப்புகள் துறையின் முதன்மையர் பாபு, ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் கோபால், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பத் துறையின் இயக்குனர் செந்தில், தாவர உயிரித்தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வெள்ளைக்குமார் மற்றும் வனக்கல்லுாரி ஆராய்ச்சி நிலைய முதன்மையர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.