நரிக்குறவர் பட்டதாரிகள் நடத்தும் பள்ளி; அடிப்படை வசதி இல்லாத அவலம்
விழுப்புரம்: கோலியனூர் நரிக்குறவர் காலனியில் செயல்படும் சிறப்பு உண்டு உறை விடப் பள்ளியில் அரசு எந்த அடிப்படை வசதியும் செய்து தராததால் மாணவர்கள் பரிதாப நிலையில் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் நரிக்குறவ இன மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (எம்.பி.சி.,) பட்டியலில் உள்ளனர். பிற மாநிலங்களில் உள்ளது போல் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென நரிக்குறவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் அரசும், ஜாதி அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், வானூர், கள்ளக் குறிச்சி ஆகிய எட்டு தாலுகாகளில் உள்ள 18 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். கோலியனூர் கூட்ரோடு அருகே உள்ள நரிக் குறவர் காலனியில் 60க்கும் மேற்பட்டவர்கள் 75 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசிக்கின்றனர். நரிக்குறவர் சமுதாயத்தில் படித்த பட்டதாரிகள் ஏழு பேர் சேர்ந்து ‘டிரைபல் சொசைட்டி’ என்ற சங்கத்தை துவங்கினர். தங்கள் சமுதாயத்தை கல்வி ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்று ஏழு பேரும் ஒரு நபருக்கு தலா 3 மாவட்டங்கள் வீதம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இந்த சங்கம் மூலம் கல்விப் பணி செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே நரிக்குறவர் இன பட்டதாரிகளால் துவங்கிய ‘டிரைபல் சொசைட்டி’ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் நரிக்குறவர்களுக்கான சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளி கோலியனூர் கூட்ரோடு நரிக்குறவர் காலனியில் செயல்படுகிறது. இங்கு இரண்டு ஆசிரியைகள், ஒரு சமையலர், ஒரு வாட்சுமேன் பணிபுரிய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இங்கு கூடுதலாக ஆறு பேர் சேர்ந்து 10 பேர் தன்னார்வலர்களாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கின்றனர். இங்கு 23 மாணவிகள் உட்பட மொத்தம் 50 பேர் படிக்கின்றனர். இந்த தொண்டு நிறுவனம் தானாக கல்வி மையம் நடத்த முன் வந்தும் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவில்லை. ஒரு மாணவருக்கு ஒரு வேளை உணவுக்கு ரூ.5 வீதம் நாள் 3 வேலை உணவு உடை, அத்தியாவசிய தேவைகளுக்கு மாதத்திற்கு ரூ.680 வழங்கப்படுகிறது. 1989ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் இலவச மனைப்பட்டா வழங்கி 1991ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் கட்டிய 14 தொகுப்பு வீடுகள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டுள்ளன. மேல்தளம் காரை பெயர்ந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் தொடக்கப் பள்ளி கட்ட இட வசதி இருந்தும் அரசு பள்ளிக் கட்டடம் கட்டித்தரவில்லை. இதனால் இடிந்து விழும் ஆபத்தான குடிருப்புகளுக்கு எதிரே தற்காலிக ஷெட்டில் பள்ளி செயல்படுகிறது. கழிப்பிட வசதி இல்லாததால் தங்கள் பகுதியிலேயே கழிப்பறைக் கட்டடத்திற்கு இடம் ஒதுக்கித்தர முன் வந்தும் கட்டடம் கட்டவோ, கழிப்பறை கட்டவோ அரசு முன்வரவில்லை. மத்திய அரசின் ‘சர்வ சிக்ஷ அபியான்’ என்ற அனைவருக்கும் கல்வித் திட்டம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நரிக்குறவர் இனத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகள் குறித்து கணக்கெடுத்தால் எண்ணிக்கை பல மடங்காக உயரும். அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சேர்ந்தால் தான் எந்த திட்டமும் வெற்றி பெற முடியும். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள விழுப்புரத்தை தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக கொண்டு வரவும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் ஏட்டளவில் அறிவிப்போடு மட்டும் நிற்காமல் நரிக்குறவர் இன மக்களை அதிகாரிகள் நேரில் சந்தித்து அவர்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி தரமான கல்வியை அளித்தால் ‘2020ல் இந்தியா வல்லரசு நாடு’ ஆகும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு நனவாகும். ஆஷாகுளத்திலும் இதே கதி தான்: விழுப்புரம் அடுத்த சாலாமேடு ஆஷாகுளம் நரிக்குறவர் காலனியில் கடந்த 1999ம் ஆண்டு முதல் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டியும் எந்த வசதியையும் அரசு செய்து தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நரிக்குறவர்களை அரசு புறக்கணிப்பதற்கு இதுவே எடுத்துக் காட்டாகும்.