உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த வகுப்பறை கட்டத்தை இடித்து மாணவர் அச்சத்தை போக்க கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த வகுப்பறை கட்டத்தை இடித்து அப்புறப்படுத்தி, மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்கு அருகே, ஓடுகள் வேய்ந்த வகுப்பறை கட்டடம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு அறைகளாக இது பயன்பட்டது. பள்ளியில் புதிதாக 24 வகுப்பறைகள் கட்டிய நிலையில், இங்கு செயல்பட்ட வகுப்புகள், அங்கு மாற்றப்பட்டதால், இக்கட்டடம் காலியானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி, ஓடுகள் உடைந்த நிலையில், பாழடைந்து காணப்படுகிறது; உடைந்த மேஜை, நாற்காலிகள், சேதமடைந்த பொருட்களை இங்கு போட்டு வைக்கின்றனர். மாணவர் நடமாடும் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடம் உள்ளதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆபத்தை அறியாமல், சில மாணவர்கள் கட்டடத்துக்குள் சென்று விளையாடுகின்றனர். பெற்றோர் கூறுகையில், "மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள, அலங்கோலமாக காட்சியளிக்கும் பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்; அப்பகுதியை விளையாட்டு மைதானமாகவோ, பிற தேவைகளுக்கோ பயன்படுத்தும் வகையில், கட்டடத்தை இடிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்