வேளாண் - தோட்டக்கலை இணைப்பு: பணியிடம் குறைக்க வாய்ப்பு?
திருப்பூர்: வேளாண் துறையுடன் தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் விற்பனை வணிக வரித்துறையை இணைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. உயரதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.வேளாண் மற்றும் உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் 13 துறைகள் உள்ளன. இவற்றில் உள்ள வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை வணிகத்துறையை ஒன்றாக இணைப்பது என, அரசு கொள்கை முடிவெடுத்து, நிர்வாக ரீதியான பணிகளை துவக்கியது. அதன்படி, தோட்டக் கலை மற்றும் வேளாண் மை துறையில் உதவி அலுவலர் பணியிடங்களுக்கு பதிலாக, நான்கு ஊராட்சிகளுக்கு சேர்த்து, ஒரு விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவார்; இவர்கள், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பிற துறைகளின் பணியையும் ஒருங்கிணைத்து மேற்கொள்வர் என, அறிவிக்கப்பட்டு, விரிவாக்க அலுவலர் பணிக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டது.இருப்பினும், இதுவரை துறையை இணைப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.உழவர் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில், உதவி அலுவலர் பதவியில் உள்ளவர்கள் தான் விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று, களத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர், உதவி இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர் என, அதிகாரி பணியிடங்கள் தான் அதிகம்.துறைகள் ஒருங்கிணைக்கப்படும் போது, அதிகாரிகள் பணியிடமும் சுருக்கப்பட வேண்டும்; இப்பணியை திட்டமிடுவதில் தான் குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.