கல்வெட்டு நகல்களை தமிழகத்திற்கு மாற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
மதுரை: மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டு நகல்களை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் மணிமாறன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக பழமையான கல்வெட்டுகள் படி எடுத்தல் முறையில், காகிதத்தில் தொல்லியல் துறையால் நகல்கள் எடுக்கப்பட்டன. அவை கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள மத்திய கல்வெட்டு ஆய்வு மையத்தில் உள்ளன. மைசூரு மையத்திலுள்ள தமிழ் கல்வெட்டு நகல்களை முறையாக பராமரிக்கவில்லை. அவற்றை தமிழக தொல்லியல்துறைக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு, மத்திய கலாசார துறை செயலர், தமிழக தொல்லியல் துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி நான்கு வாரங்கள் ஒத்திவைத்தது.