கவர்னர் வந்தார்; அமைச்சர் வரவில்லை...! தொடர்கிறது பட்டமளிப்பு விழா பாலிடிக்ஸ்
நாகை: நாகையில் நடைபெற்ற பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் வந்துவிட, விழாவை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து இருக்கிறார் அமைச்சர் ராதாகிருஷ்ணன்.பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பவர் கவர்னர். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார். இந்த விழாக்களில், இணை வேந்தர்களாக இருக்கும் அமைச்சர்களும் பங்கேற்பது மரபு. ஆனால் தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது அரசியலை உற்றுநோக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.இதனால் கவர்னர் செல்லும் பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணித்து வருகின்றனர். லேட்டஸ்ட்டாக நாகையில் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் இதே புறக்கணிப்பு அரங்கேறி உள்ளது. இந்த விழாவில் கவர்னர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பல்கலைக்கழக இணைவேந்தரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.பட்டமளிப்பு விழாவில் அழைப்பிதழில் பெயர் இல்லை என்பதால் கலெக்டரும் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.