ஹைப்பர்லுாப் சோதனை தடம் தயார்: சாதித்து காட்டியது சென்னை ஐ.ஐ.டி.,
புதுடில்லி: போக்குவரத்து துறையில் புதிய புரட்சி என்று கூறப்படும், 'ஹைப்பர்லுாப்' ரயில்களை இயக்குவதற்காக, நாட்டிலேயே முதல் சோதனை தடத்தை, சென்னை ஐ.ஐ.டி., தயார் செய்துள்ளது. விரைவில் இதில் ரயிலை இயக்கி சோதிக்கப்பட உள்ளது.ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ஹைப்பர்லுாப் ரயில்களை இயக்குவது தொடர்பான ஆராய்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் ஈடுபட்டுள்ளது. தற்போது சென்னைக்கு அருகே உள்ள தையூரில் அதன் வளாகத்தில், 422 மீட்டர் நீளத்துக்கு, ஹைப்பர்லுாப் ரயில் இயக்குவதற்காக சோதனை தடம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் இதில் ஹைப்பர்லுாப் ரயில் இயக்கி சோதிக்கப்பட உள்ளது. இதை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிதாக வளர்ந்து வரும் ஹைப்பர்லுாப் தொழில்நுட்பத்தில், புதிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். சென்னை ஐ.ஐ.டி., தன் வளாகத்தில், 422 மீட்டர் நீளத்துக்கான சோதனை தடத்தை அமைத்துள்ளது. இந்த திட்டத்துக்காக இரண்டு கட்டங்களாக, தலா, 8.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டமாக 8.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, 350 கி.மீ., துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும். எதிர்கால போக்குவரத்து மேம்பாட்டுக்காக, கல்வி நிறுவனத்துடன் அரசு இணைந்து இதை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னையில் இருந்து திருச்சிக்கான, 330 கி.மீ., துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும். தற்போது ரயிலில் 6 மணி நேரமும், விமானத்தில், 1 மணி நேரத்துக்கும் பயணம் செய்ய வேண்டியுள்ளது.ஹைப்பர்லுாப் என்றால் என்ன?ஹைப்பர்லுாப் என்பது, நீண்ட துாரங்களுக்கு இடையே அதிவேகமாக பயணம் செய்யக் கூடிய எதிர்கால போக்குவரத்து முறை. இதில், லுாப் எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதி தயாரிக்கப்படும். இதில் தான், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற வாகனம் இயங்கும். ஒரு பெட்டியில் 24 - 28 பேர் பயணிக்க முடியும். ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, நடுவில் எங்கும் நிற்காமல், பாயின்ட் டூ பாயின்ட் சென்றடையும்.இந்த குழாயில் காற்றழுத்தம் இருக்காது என்பதால், காற்றால் ஏற்படும் தடை இருக்காது. அதனால், இந்த ரயில் அதிக வேகத்தில் இயங்க முடியும். சாதாரணமாக வாகனங்களுக்கு உராய்வு ஏற்படுவதாலேயே வேகம் குறைகிறது. இதில் உராய்வு இருக்காது. அதனால், ரயில் பாதையில் இருந்து சில அங்குலம் உயரத்தில் காந்தசக்தியில் இயங்கும். ஒரு நேரத்தில் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்பதால், மோதி விபத்துக்குள்ளாவதற்கு வாய்ப்பு கிடையாது. மிகவும் குறைந்த எரிசக்தி போதும். தற்போது இந்த பாட் எனப்படும் ரயில்பெட்டியை இயக்கி சோதித்து பார்ப்பதற்கான, 422 மீட்டர் நீளத்துக்கு லுாப் அமைக்கப்பட்டு அது தயார் நிலையில் உள்ளது.