புத்தகத்தின் அட்டை படத்தை பார்ப்பது குழந்தை முகத்தை பார்க்கும் சந்தோஷம்
பெங்களூரு: புத்தகத்தின் அட்டை படத்தை பார்க்கும் போது குழந்தையின் முகத்தை பார்ப்பது போன்ற சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக கடல் தாமரை புத்தக பூங்காவிற்கு வந்த தினமலர் வாசகி நெகிழ்ச்சி.பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் உள்ள 'கடல் தாமரை புத்தக பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான வாசகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வகையில், நேற்று பெல்லந்துாரில் வசிக்கும் அனந்தலட்சுமி, 74, வந்தார். இவர் புத்தகங்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்.உண்மையிலே அகம் மகிழ்ந்து அவர் கூறிய வார்த்தைகள்:நான் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தேன். சிறுவயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. திருமணம் முடிந்ததும் அந்தமான் தீவுகளில் வசித்தேன். 40 ஆண்டுகள் அந்தமானில் வசித்தேன். எனது பெயரிலே புக் சென்டர் நடத்தி வந்தேன். அப்போது தான் தீவிர வாசிப்பில் ஈடுபட்டேன். தற்போது, பெங்களூரில் எனது இளைய மகள் வீட்டில் வசித்து வருகிறேன். அதுமட்டுமின்றி நீண்ட கால தினமலர் வாசகி நான்.நுாலகம் மிகவும் அருமையாக உள்ளது. இன்னும் நிறைய புத்தகங்கள் காட்சி படுத்தலாம். புத்தகங்கள் விற்பனையை தாமதமின்றி தொடங்க வேண்டும். இங்கு வந்தது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இங்குள்ள பாதிக்கு மேற்பட்ட புத்தகங்களை நான் ஏற்கனவே படித்து முடித்துவிட்டேன்.இந்த நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பார்க்கும் போது குழந்தையின் முகத்தை பார்ப்பது போல மகிழ்ச்சி ஏற்படுகிறது. வீட்டிலே சிறிய நுாலகம் வைத்து உள்ளேன். இனிப்பு சாப்பிட்ட சந்தோஷம் ஏற்படுகிறது. வெளிநாட்டில் உள்ள எனது பேரன்களையும் நுாலகத்திற்கு அழைத்து வருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.