தனியார் கல்லுாரிகளின் நில வரம்பை குறைக்க ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
சென்னை: 'தனியார் கல்லுாரிகளின் நில வரம்புகளை குறைக்கும் பரிந்துரைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்யக் கூடாது' என, பல்கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.பல்கலை ஆசிரியர் சங்கம் எனும், 'ஏ.யு.டி' பொதுச்செயலர் ராஜா, தமிழக உயர்கல்வித்துறை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தனியார் கல்லுாரிகள் நிர்வாக சங்கம், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தது.தனியார் கல்லுாரிகளின் நில வரம்பை, மெட்ரோ சிட்டிகளில், மூன்று ஏக்கரில் இருந்து இரண்டாகவும், மாநகரில் ஐந்து ஏக்கரில் இருந்து மூன்றாகவும், கிராமங்களில் 10 ஏக்கரில் இருந்து ஐந்தாகவும் குறைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தது.இந்த கோரிக்கையை, தமிழக அரசு பரிசீலிப்பதாக கூறியுள்ளது. இந்த கோரிக்கை, சாதாரணமான ஒன்றாக தோன்றலாம்.ஆனால், ஏற்கனவே, செயல்பாட்டில் இருக்கும் கல்லுாரிகளில் உள்ள அதிகப்படியான நிலத்தை, வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த வழிவகுக்கும். இதனால், மாணவர்களின் கல்விச் சூழல் பாதிக்கும்.எனவே, தனியார் கல்லுாரிகளின் நில வரம்பு தொடர்பான, எந்த நடவடிக்கையையும், தனியார் கல்லுாரிகள் 1976 சட்டத்தின்கீழ் மட்டுமே பரிசீலிக்க வேண்டும். தனியே, நில வரம்புகளை குறைக்க பரிசீலிக்கக் கூடாது. கல்லுாரிகளின் நில வரம்பை குறைக்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.