காலணி தொழிற்கல்வி சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் மத்திய காலணி தொழிற்கல்வி சேர்க்கைக்கு நாளை 25ம் தேதி முதல் மூன்று நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு:உளுந்துார்பேட்டை, சிப்காட் தொழிற்பூங்காவில் 2 ஆயிரத்து 302 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும், 'பவுசென்' காலணி உற்பத்தி புதிய ஆலை விரைவில் செயல்பட உள்ளது. இங்கு 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த தொழிற்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர, காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும்.இதற்காக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் 2026 - 27ம் ஆண்டிற்கான தொழிற்கல்வி சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நீண்ட கால மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி பாடப் பிரிவுகளுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் டிப்ளமோ, காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ், காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் பயிற்சி, காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பயிற்சி, காலணி தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோ ஆகிய தொழிற்கல்வி பயிலாம்.இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நாளை 25 ம் தேதி முதல் 27ம் தேதி வரை கலெக்டர் அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் கோடீஸ்வரன் 96779 43733, 96779 43633 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.