தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு
கரூர்: தேசிய மாணவர் படை பயிற்சி பெற்ற, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தனியார் பல்கலைகழக வளாகத்தில், தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்களுக்கு கடந்த, 10 நாட்களாக துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட, பல் வேறு பயிற்சி அளிக்கப்பட்டது.அதில் கரூர் மாவட்டம், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, தேசிய மாணவர் படை மாணவர்கள், 46 பேர் பங்கேற்று, பயிற்சி பெற்று சான்றிதழுடன் திரும்பினர்.அவர்களுக்கு பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் விஜயன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. விழாவில், உதவி தலைமையாசிரியர் யுவராஜ், என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி, சுற்றுச்சூழல் ஆசிரியர் ஜெரால்டு, உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.