உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் அதிருப்தி: வகுப்பை புறக்கணித்த மாணவ, மாணவியர்

ஆர்.கே.பேட்டை: பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் அதிருப்தி அடைந்த மாணவ, மாணவியர், நேற்று வகுப்பை புறக்கணித்து, பள்ளியை விட்டு வெளியேறினர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆறு ஆசிரியர்களில் இரண்டு பேர் மட்டுமே, நேற்று காலை பள்ளிக்கு வந்திருந்தனர்.இதனால் அதிருப்தி அடைந்த மாணவ, மாணவியர், வகுப்பை புறக்கணித்து பள்ளியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள விநாயகர் கோவிலில் அமர்ந்திருந்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு பெற்றோர் திரண்டு வந்தனர்.உடன், ஆர்.கே.பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் அரசு, மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மெல்கிசிங் ராஜா, இளங்கோவன் மற்றும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.ஆசிரியர்கள் பள்ளிக்கு வராதது குறித்து பெற்றோர், கல்வி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, வட்டார கல்வி அதிகாரி மோகன் கூறுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சியில் பங்கேற்றுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர இயலவில்லை. மாற்று ஆசிரியர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவர்,” என்றார்.இதை ஏற்றுக்கொண்ட பெற்றோர், மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். காலை 11:00 மணி முதல், மாற்று ஆசிரியர்களுடன் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது.அப்போது, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், சாலை மற்றும் பேருந்து வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை, அப்பகுதி மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்