உள்ளூர் செய்திகள்

யு.பி.எஸ்.சி., முதல் நிலை பயிற்சி நுழைவுத் தேர்வு முடிவு ஆக.3ம் தேதி வெளியீடு

மனித நேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட, யு.பி.எஸ்.சி., முதல் நிலை பயிற்சிக்கான நுழைவுத் தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்விற்காக, தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை பயிற்சி அளித்து வருகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள யு.பி.எஸ்.சி., முதல் நிலை பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு, தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடந்தது. இத்தேர்வை 22 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வெழுதியவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இதில், 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான பயிற்சி கையேடுகள், பயிற்சி வினாத்தாள்கள், நவீன வசதிகள் கொண்ட நூலகம், இணைய வசதி ஆகியவற்றை, மனித நேய அறக்கட்டளை இலவசமாக வழங்கும். தேர்வுக்கான முடிவுகள், அடுத்த மாதம் 3ம் தேதி மனித நேய அறக்கட்டளை இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்