உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு; நீங்களும் கட்டுரை எழுதலாம்
சென்னை: சென்னையில் அடுத்தாண்டு நடக்க உள்ள, 12வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு, ஆய்வாளர்கள் கட்டுரைகளை அனுப்பலாம் என, மாநாட்டு ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.இது குறித்து, 12வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெகத்ரட்சகன் கூறியதாவது:உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இந்திய கிளையும், எஸ்.ஆர்.எம்., தமிழ் பேராயமும் இணைந்து, அடுத்தாண்டு ஏப்ரலில், 12வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடத்த உள்ளன.இதற்கு இலக்கியம், இலக்கணம், மொழி, சமய நெறிகள், நாட்டுப்புறவியல், உரை, பதிப்பு, நாடகம், அகராதி, கல்வெட்டு, ஓலைச்சுவடி, மொழிபெயர்ப்பு, தொல்லியல், இசை, ஓவியம், சிற்பம், சித்த மருத்துவம், வணிகம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் தமிழர்களின் தாக்கம் குறித்த ஆய்வு கட்டுரைகளை அனுப்பலாம்.அது மட்டுமின்றி, மாநாட்டின் கருப்பொருளுடன் தொடர்புடைய அயலக தமிழ் கல்வி, மானிடவியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட தலைப்புகளிலும் கட்டுரைகள்அனுப்பலாம்.ஆய்வு கட்டுரைகளை இந்தாண்டு இறுதிக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு முன், கட்டுரைக்குள் எழுத விரும்பும் கருத்துக்களை சுருக்கமாக எழுதி, ஜூலைக்குள் அனுப்ப வேண்டும். அதில் தேர்வாகும் கட்டுரையாளர்களுக்கு,செப்டம்பருக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.கட்டுரைகளை, https//forms.gle/2xcr44BVYNqw1G5eA என்ற இணைப்பின் வாயிலாக பதிவேற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2741 7375 - 77 ஆகிய தொலைபேசி எண்கள்; 98842 37395, 99414 94402, 87789 42532 ஆகிய மொபைல் போன் எண்களிலோ, iatr12wtcsrmist.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.