உயர்நிலை மாணவருக்கு இ-மெயில்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
திருப்பூர்: அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்த மாதத்துக்குள் இ-மெயில் (மின்னஞ்சல்) முகவரி உருவாக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், உயர்கல்வி பாடத்திட்டம், சேர்க்கை, அட்மிஷன், விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இ-மெயில் மூலம் மாணவ, மாணவியருக்கு பகிரப்படுவது வாடிக்கையாகியுள்ளது.பெரும்பாலான அரசு பள்ளி மாணவ, மாணவியர் தெளிவான புரிதல் இல்லாமல், பிளஸ் 2 முடிக்கும் வரை தங்களுக்கென தனி இ-மெயில் முகவரி துவங்காமல் இருந்து விடுகின்றனர். பள்ளி படிப்பு முடிக்கும் வரை வழிகாட்டுதல் இல்லாமல் உயர்கல்வி மற்றும் கல்லுாரியில் இணைய வழி தேடுகின்றனர்.இதனை தவிர்க்க, மாணவர்கள் எதிர்பார்க்கும் கல்வி தேவை என்ன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த, இ-மெயில் முகவரி, பள்ளி ஆய்வகம் வாயிலாக துவங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.புதிய இ-மெயில் முகவரி உருவாக்கி, அவ்விபரங்களை மாணவர் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மெயிலை நிர்வாகிப்பது, பாஸ்வோர்டு ரகசியமாக வைப்பது குறித்து எடுத்துரைக்க வேண்டும்.உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு குறித்து, cgtnss@gmail.com என்ற முகவரிக்கு விபரங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான உயர்கல்வி வழிகாட்டுதல் இ-மெயில் மூலம் கல்வித்துறையால் வழங்கப்பட உள்ளது.இது தொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.