என்.ஐ.டி. பேராசிரியருக்கு பதவி உயர்வு: கேரள அரசியலில் சர்ச்சை!
கோழிக்கோடு: காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை பாராட்டிய என்.ஐ.டி. பெண் பேராசிரியருக்கு பரிசாக என்.ஐ.டி.யின் இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு காங்., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.கேரள மாநிலம் கோழிக்கோடு என்.ஐ.டி.யில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷாயிஜா ஆண்டவன். கடந்தாண்டு பிப்ரவரியில் சமூக வலைதளத்தில் கோட்சே படத்துடன், இந்தியாவை காப்பாற்றிய நாதுராம் கோட்சேவை நினைத்து பெருமை படுகிறேன். பாரத மக்களின் ஹீரோ, நாதுராம் கோட்சே என பாராட்டி பதிவேற்றினார்.இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குபதியப்பட்டு, குன்னமங்கலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார்.இந்நிலையில் ஷாயிஜாவுக்கு கோழிக்கோடு என்.ஐ.டி.யின் , திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கேரள காங்கிரஸ், கம்யூ.க்கள் ,தயூப் எனப்படும் ஜனநாயக வாலிபர் சங்கம், எஸ்.எப். ஐ., எனப்படும் இந்திய மாணவர் சங்கம் ஆகியன கண்டனம் தெரிவித்தன.தற்போதைய இயக்குனராக ப்ரியா சந்திரன் வரும் ஏப்ரலில் ஒய்வு பெறுவதால் விதிப்படியே ஷாயிஜா ஆண்டவன் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.