ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஆறாம் வகுப்பு மாணவி படுகாயம்
வெட்டுவாங்கேணி: இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில், பள்ளி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த ஆறாம் வகுப்பு மாணவிக்கு, கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை, அக்கரை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 38; தனியார் நிறுவன பாதுகாப்பு பிரிவு மேலாளர். இவரது மனைவி சகாயமேரி.இவர்களது மூத்த மகள் நிஷாந்தினி, 10, வெட்டுவாங்கேணியில் உள்ள, செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது இறுதி ஊர்வலம் எதிர் திசையில் வந்தது. அதில், வெடிக்கப்பட்ட பட்டாசுகள் சாலையில் சிதறின. அதில் ஒன்று, நிஷாந்தினியின் முகத்தில் பட்டு வெடித்தது. இதில், சிறுமியின் இடது கண், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, கணேசனின் குடும்பத்தைச் சேர்ந்த கலைமுருகனை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.