மாணவர் சேர்க்கையில் கட்டுப்பாடு: கல்வித்துறை உத்தரவால் பாதிப்பு
தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடால், கிராம மாணவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவு பாடங்களில் ஒரு வகுப்பிற்கு 40, கலைப்பிரிவு பாடங்களுக்கு ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தமிழ், ஆங்கிலத்தில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அறிவியல் பாட வகுப்புகளில் தலா 32, கலைப்பிரிவில் தலா 50, மொழி பாடப்பிரிவில் 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்க கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போதுமான ஆய்வு கூடம், அடிப்படை வசதிகள் உள்ள பல கல்லூரிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரிகளே ஒன்றிரண்டு தான் உள்ள நிலையில், இங்கு மாணவர்கள் சேர்க்கை குறைப்பால் கிராம மாணவர்கள் பாதிக்கின்றனர். கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ஆண்டு தோறும் பிளஸ் 2 ல் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அதிகரித்து வரும் நிலையில், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைப்பால் கிராம மாணவர்கள், பின்தங்கியவர்கள் பட்ட படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது, என்றார்.