பொறியியல் கலந்தாய்வு ஒரு பிரமாண்ட மாணவர் சேர்க்கை
இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேர மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 353 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஜுன் மாதம் 30ம் தேதி, கவுன்சிலிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் முடிவடைந்ததையடுத்து, தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. பின்னர் பலரும் எதிர்பார்த்த பொதுப்பிரிவு கவுன்சிலிங் கடந்த 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்தாண்டு பொறியியல் படிப்பிற்கு ஏறக்குறைய 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த மொத்த விண்ணப்பங்களையும் குறைந்த கால அளவுக்குள் நுணுக்கமாக சரிபார்ப்பது என்பது சாதாரண காரியமல்ல. ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்படின், அதற்கான காரணமும் தெளிவாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. விண்ணப்பத்துடன் ஏதேனும் சான்றிதழின் நகல் விடுபட்டிருந்து, அதை மீண்டும் அனுப்பினால், அந்த சான்றிதழும் குறிப்பிட்ட விண்ணப்பத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு அத்தனை பேருக்கும் ரேண்டம் எண் அனுப்பப்பட்டு, அடுத்ததாக ரேங்க் வழங்கப்படுகிறது. ரேங்க் வழங்கப்பட்டப் பிறகு, எந்தெந்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு என்னென்ன தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பையடுத்து, கால் லெட்டர் அனுப்பப்படுகிறது. மேலும், கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் என்னென்ன ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துவர வேண்டும் என்ற விவரமும் வழங்கப்படுகிறது. அண்ணாப் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்தவுடன், வங்கியில் பணம் செலுத்த வேண்டும், பின்னர் கவுன்சிலிங் நடைமுறைகள் என்ன என்பதை விளக்கும் அரங்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கே கவுன்சிலிங் நடைமுறை விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. காலியிட நிலவரங்களை அறிந்துகொள்வதற்கான திரையும் இங்கே உண்டு. பின்னர் விண்ணப்ப விவரங்களை சரிபார்க்கும் பகுதிக்கு சென்று, விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இறுதியாக கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் பகுதிக்குள் சென்று, நமக்கு விருப்பமானதை தேர்வுசெய்தவுடன், அடுத்த 5 நிமிடத்திற்குள் அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படுகிறது. ஒதுக்கீட்டு கடிதம் பெற்றவுடன், மருத்துவ பரிசோதனை செயல்பாடு இறுதியாக நடைபெறுகிறது. குறிப்பிட்ட கட்-ஆப் மதிப்பெண்களுக்கு குறிப்பிட்ட நேரமே ஒதுக்கப்பட்டாலும், கல்லூரியையும், பாடப்பிரிவையும் விரைவாக தேர்வுசெய்யும்படி யாருக்கும் நெருக்கடி கொடுக்கப்படுவதில்லை. அனைவருக்கும், யோசிப்பதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஏற்பாடுகளையும் வெறும் 50 அல்லது 100 பேருக்கு செய்வது மிகவும் சாதாரண ஒரு விஷயம். ஆனால் 1.5 லட்சம் மாணவர்களுக்கு செய்வதென்பது ஒரு அற்புதமான, ஆச்சர்யமான விஷயம். மேலும் இவ்வளவு பெரிய மாணவர் சேர்க்கை வைபவத்தை ஒரு நாள் கூட இடைவெளியின்றி, தொடர்ச்சியாக, எந்தவித தடங்கலுமின்றி நடத்துவது மிகப்பெரிய பாராட்டுக்குரிய ஒரு அம்சம். இதைத்தான் அண்ணா பல்கலை இப்போது செய்துள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. ஒரு நாளைக்கு 3000 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதென்பது எளிதான காரியமல்ல. இந்திய அளவில் நடைபெறும் மாணவர் சேர்க்கை செயல்பாட்டில், மிகப்பெரிய மற்றும் சிறப்பான செயல்பாடாக இதைக் கூறலாம். தமிழ்நாட்டில் மொத்தம் 480 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் பணிபுரியும் பல்கலை ஊழியர்களின் ஒருங்கிணைப்பும் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. சாதாரண மக்களுக்கு பொறுமையாகவும், தெளிவாகவும் வழிகாட்டுகின்றனர். கலந்தாய்வு செயல்பாடு குறித்து, கோவையிலிருந்து வந்து இ.சி.இ. பிரிவை தேர்வுசெய்த மாணவி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர்களிடம் கேட்டபோது, "கலந்தாய்வு ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாகவும், எளிமையாகவும் உள்ளன. நாங்கள் எந்த கஷ்டமுமின்றி எங்களுக்கான கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்தோம். ஊழியர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தது. ஒதுக்கீட்டு கடிதமும் உடனே கிடைத்துவிட்டது. இறுதிப் பகுதியான ஒதுக்கீட்டுப் பகுதிக்கு செல்வதற்கு முன்பாக, காத்திருக்கும் இடம் சற்று பெரிதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் நின்றுகொண்டே இருந்தோம். மற்றபடி குறை சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றனர். தூத்துக்குடியிலிருந்து வந்து மெக்கானிக்கல் பிரிவை தேர்வுசெய்த விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரிடம் இதுகுறித்து கேட்டபோது, "இது மிகவும் திருப்திகரமான ஒரு ஏற்பாடு. இவ்வளவு பெரிய ஒரு ஏற்பாட்டை, சிக்கலின்றி, நுணுக்கமாக செய்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது. குறை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றனர்.