பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் அமைக்க முதல்வர் உத்தரவு
தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இடங்களில், அரசு சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கு, ரூ.179.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.14.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மதுரை, திருச்சி, தேனி மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மொத்தம் 10 பாலிடெக்னிக்குகள் அமைக்க ரூ.138 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறையை இயந்திரமயப்படுத்தும் அரசின் முயற்சியை மேம்படுத்தும் வகையில், 300 கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சியளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, கோவை, மதுரை, வேலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறைகளின் டிப்போக்களில் தலா 50 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க, தலா ரூ.42.90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.